இன்று ஆசிரியர் தினம்: 354 பேருக்கு விருது
மறைந்த குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாள்தான் ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் தேசிய அளவிலும், மாநில அளவிலும் ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கிக் கெளரவிக்கப்படுகிறது.
இன்று ஆசிரியர் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தில், 354 ஆசிரியர், ஆசிரியைகளுக்கு மாநில அரசின் சார்பில் நல்லாசிரியர் விருது இன்று வழங்கப்படுகிறது. தேசிய அளவில் வழங்கப்படும் நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்திலிருந்து 22 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஆசிரியர் தினத்தையொட்டி முதல்வர் கருணாநிதி வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
ஆசிரியராகப் பணி தொடங்கி, நம் இந்தியத் திருநாட்டின் குடியரசுத் தலைவராக விளங்கி உலகப் புகழ் குவித்த தத்துவ மேதை இராதாகிருஷ்ணன் பிறந்த செப்டம்பர் 5ஆம் நாள் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
ஆசிரியப் பெருமக்களின் நல்வாழ்வு கருதி உயர் கல்விக்கு ஊக்க ஊதியம்; 10 ஆண்டு பணி முடித்தால் தேர்வுநிலை ஊதியம்; 20 ஆண்டு பணி முடித்தால் சிறப்பு நிலை ஊதியம்; தமிழாசிரியர்களிடையே இருநிலை நீக்கம்; தமிழாசிரியர்கள் புலவர்" பட்டம், பி.லிட்" பட்டமாக மாற்றம்; தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்ட நல்லாசிரியர் விருதுகளை, உயர்நிலைப் பள்ளி ஆங்கிலோ இந்தியன் பள்ளி உள்ளிட்ட பிற பள்ளிகளின் ஆசிரியர்களுக்கும் வழங்கிட ஆணைகள்; நல்லாசிரியர் விருது இராதாகிருஷ்ணன் விருது எனப் பெயர் மாற்றம்;
விருதுத்தொகை 1000 ரூபாயை 1997இல் 2000 ரூபாய் என்றும், 2006இல் 5000 ரூபாய் என்றும் உயர்த்தியமை; மத்திய அரசு ஊழியர்களுக்கு நிகரான ஊதிய உயர்வுகள், அகவிலைப்படிகள் உட்பட அரசு ஊழியர்களுக்கான சலுகைகள் அனைத்தையும் ஆசிரியர் சமுதாயமும் பெற்றுப் பயனடையச் செய்கின்றமை, பதிவு மூப்பு அடிப்படையிலேயே பள்ளி ஆசிரியர் நியமனம், தொகுப்பூதிய ஆசிரியர் நியமன முறை அடியோடு ரத்து
எனச் சலுகைகளை வழங்கி அவர்களைக் காத்து வருகின்றமை முதலான இந்த அரசு வழங்கும் ஆசிரியர் நலத்திட்டங்களை நினைவு கூர்ந்து ஆசிரியர் சமுதாயம் தமது மக்கள் மனை, சுற்றம் சூழ, நலனும் வளனும் வாய்ந்து மகிழ்வுடனும் மன நிறைவுடனும் பல்லாண்டு புகழுடன் வாழ என் இதயங்கனிந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துக்களையும், இன்று மத்திய-மாநில அரசுகளின் விருதுகள் பெறும் ஆசிரியப் பெரு மக்களுக்கு என் பாராட்டுகளையும் தெரிவித்து மகிழ்கிறேன் என்று கூறியுள்ளார்.