திருக்குறளை தேசிய நூலாக்க கோரி நடைபயணம்
வடலூர்: திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என தமிழக கவிஞர் கலை இலக்கிய சங்கம் சார்பில் நடைப்பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என தமிழக கவிஞர் கலை இலக்கிய சங்கம் சார்பில் வடலூர் வள்ளலார் கோட்டத்திலிருந்து சென்னை வள்ளூவர் கோட்டத்துக்கு நடைப்பயணம் ஒன்று துவக்கப்பட்டுள்ளது. இந்த நடைபயணத்தை ஊரன் அடிகளார் தொடங்கி வைத்தார்.
விழாவில் திருக்குறள் அரசு கழகம் மாநில அமைப்பு செயலாளர் முத்துக்குமரன், சாந்தி கல்வி அறக்கட்டளை தலைவர் ராஜமாரியப்பன், அரிமா சங்க தலைவர் சிவசுப்பிரமணியன், கெங்கை கொண்டான் நூலகர் வேல்முருகன் ஆகியோர் பங்கேற்றனர்.
பின்னர் தமிழக கவிஞர் கலை இலக்கிய சங்க செயலாளர் கலைஅரசன் தலைமையில் 50 கவிஞர்கள் கைகளில் திருவள்ளுவர் படத்தை ஏந்தியவாறே நடைபயணம் புறப்பட்டனர். தங்களது கோரிக்கை வாசகங்களை கொண்ட அட்டைகளையும் ஏந்தி சென்றார்கள்.
அவர்கள் பண்ருட்டி, திண்டிவனம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக வரும் 22ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டம் சென்றடைவார்கள்.