For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

22 தமிழர்களின் நூல்கள் நாட்டுடமை - ரூ. 84 லட்சம் பரிவுத் தொகை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: 22 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடமையாக்கப்படுவதாகவும், அதற்கான பரிவுத் தொகையாக ரூ. 84 லட்சம் வழங்கப்படும் எனவும் முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சிறந்த தமிழறிஞர்களின் நூல்கள் அனைவரையும் சென்றடைதல் வேண்டும் எனும் சீரிய நோக்கில் அந்நூல்களை நாட்டுடைமையாக்கி, அவற்றை படைத்த தமிழறிஞர்களின் மரபுரிமையாளர்களுக்குப் பரிவுத் தொகை வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

2006-ல் இந்த அரசு பொறுப்பேற்றபின் பரிதிமாற் கலைஞர், புலவர் குழந்தை, முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் முதலான 65 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு, அவர்களின் மரபுரிமையாளர்களுக்கு ரூ.4 கோடியே 86 லட்சம் பரிவுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, 2009-2010-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 28 தமிழ்ச்சான்றோர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்கள் உருவாக்கிய நூல்களின் எண்ணிக்கை, அவை சமுதாயத்தில் ஏற்படுத்திய தாக்கம், அவற்றின் பெருமை ஆகியவற்றின் அடிப்படையில் அவர்தம் மரபுரிமையருக்கு பரிவுத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பினை செயல்படுத்தும்வண்ணம் குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா, பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார், இராய சொக்கலிங்கனார், ச.அகத்தியலிங்கம், பாவலர் நாரா. நாச்சியப்பன், புலியூர்க் கேசிகன், சின்ன அண்ணாமலை, வடுவூர் துரைசாமி அய்யங்கார், பேராசிரியர் மு.ராகவையங்கார் ஆகிய 9 தமிழ்ச் சான்றோர்களின் படைப்புகளை அரசுடைமையாக்கி அவர்களின் மரபுரிமையருக்கு தலா ரூ.5 லட்சம் பரிவுத் தொகை வழங்கப்படும்.

பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை, பம்மல் சம்பந்தனார், டாக்டர் அ.சிதம்பரநாதன் செட்டியார், மு.சு. பூர்ணலிங்கம் பிள்ளை, தொ.மு.பாஸ்கர தொண்டைமான், பாலூர் கண்ணப்ப முதலியார், வை.மு. கோதை நாயகி, பூவை எஸ்.ஆறுமுகம், என்.வி. கலைமணி, கவிஞர் முருகுசுந்தரம், புலவர் த.கோவேந்தர், திருக்குறள்மணி அ.க.நவநீதகிருட்டிணன் ஆகிய தமிழ்ச்சான்றோர்களின் படைப்புகளை அரசுடைமையாக்கி அவர்களின் மரபுரிமையருக்கு தலா ரூ.3 லட்சம் ரூபாய் பரிவுத்தொகை வழங்கப்படும் என்றும், முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.

இந்த ஆண்டில் நிதிநிலை அறிக்கையில் படைப்புகள் அரசுடைமையாக்கப்படுமென அறிவிக்கப்பட்ட 28 தமிழறிஞர்களில் எஞ்சிய 7 தமிழறிஞர்களில் கவியரசு கண்ணதாசன், டாக்டர் மு.வரதராசனார், எழுத்தாளர் சாண்டில்யன், எழுத்தாளர் சுந்தர ராமசாமி, லட்சுமி ஆகிய 5 தமிழறிஞர்களின் நூல்களை நாட்டுடைமையாக்குவதற்கு அவர்களுடைய மரபுரிமையர்கள் இசைவு அளிக்கவில்லை.

ஜெ.ஆர்.ரங்கராஜு, ஜமத்கனி ஆகிய இருவரின் மரபுரிமையர்களிடம் சான்றாவணம் பெறுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், சாகித்ய அகாடமி விருது மற்றும் தமிழக அரசின் விருது ஆகியவற்றை பெற்றுள்ள சிறந்த தமிழ் எழுத்தாளரான ராஜம் கிருஷ்ணன் உடல் நலிவுற்று சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது வேண்டுகோளை ஏற்று, தனிநேர்வாக கருதி அவரது படைப்புகளை அரசுடைமையாக்கி, மரபுரிமையர் ஒருவருமில்லாத, காரணத்தால் அவருக்கு 3 லட்சம் பரிவுத் தொகை வழங்கிடவும் முதல்-அமைச்சர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.

இந்த ஆணைகளின் பயனாக மொத்தம் 22 தமிழறிஞர்களின் நூல்கள் அரசுடைமையாக்கப்பட்டு மொத்தம் 84 லட்சம் ரூபாய் பரிவுத் தொகையாக வழங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X