இங்கிலாந்து மக்கள் உலக மகா சோம்பேறிகள்-சர்வே
லண்டன்: சமீபத்திய சர்வே ஒன்று உலக மகா சோம்பேறிகள் பட்டத்தை இங்கிலாந்து மக்களுக்கு வழங்கியுள்ளது.
இங்கிலாந்து மக்கள் சுமார் 2 ஆயிரம் பேரிடம் லேசி லீக் டேபிள் என்ற நலநிதி அமைப்பு சர்வே ஒன்றை நடத்தியது. சமீபத்தில் வெளியிடப்பட்ட அதன் முடிவு இங்கிலாந்து மக்களை பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. அது இங்கிலாந்து மக்கள் உலக சோம்பேறிகள் என தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து மக்களில் 6ல் ஒருவர் ரிமோட் கண்ட்ரோல் இல்லாத சூழ்நிலையில் எழுந்து சென்று டிவியை மாற்றமாட்டார்கள். சோம்பேறித்தனம் காரணமாக அதே சேனலை பார்த்து கொண்டிருப்பார்கள், 59 சதவீதம் பேர் முதல் மாடிக்கு கூட லிப்டில் தான் செல்வார்கள் என தெரிவித்துள்ளது.
அவர்களில் 75 சதவீதம் பேர் தாங்கள் ஜிம் பக்கம் போனதே கிடையாது என கூறியுள்ளனர். சிலர் சோம்பேறித்தனத்தால் சில சமயம் செக்சுக்கு கூட நோ சொல்லிவிடுவதாக தெரிவித்துள்ளனர். அலுவலகத்தில் வேளை கொஞ்சம் அதிகம் இருந்தால் இளசுகள் கூட மன்மத கலையை மறந்துவிடுகிறார்களாம்.
மேலும், 64 சதவீதம் பேர் குழந்தைகளுடன் விளையாடுவதற்கு சோம்பேறித்தனமாக தடையாக இருப்பதை ஒப்பு கொண்டுள்ளனர்.
இது குறித்து நப்பீல்டு ஹெல்த் மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் சாரா டவுன்சி கூறுகையில், ரெடிமேட் உணவு, ரிமோட் கண்ட்ரோல், இன்டர்நெட் ஷாப்பிங் ஆகியவை மக்களை சோம்பேறிகள் ஆக்கிவிட்டது. இங்கிலாந்து மக்களை இந்த மோசமான சோம்பேறித்தனத்தில் இருந்து காப்பாற்ற வேண்டியது அவசியம் என்றார்.
சோம்பேறித்தனம் காரணமாக அதிகம் குண்டாகி வரும் இங்கிலாந்து மக்களில் 9 ஆயிரம் பேர் ஆண்டுதோறும் தங்களது வாழ்நாளை விரைவிலே இழந்துவிடுகின்றனர். 58 சதவீதம் பேருக்கு சக்கரை நோயும், 21 சதவீதம் பேருக்கு இதய கோளாறும் ஏற்படும் வாய்ப்பு வெகுவாக அதிகரித்துள்ளது. மேலும், மக்களின் வாழ்நாள் 9 ஆண்டுகள் குறைந்துவிடும் என கூறப்படுகிறது.
இங்கிலாந்து மக்கள் தொகையில் 2050ம் ஆண்டு வாக்கில் பெரியவர்களில் 10ல் 9 பங்கினரும், குழந்தைகளி்ல் 3ல் 2 பங்கினரும் அதிகம் குண்டாக இருப்பார்கள என கணக்கிடப்பட்டுள்ளது. இதையடுத்து இங்கிலாந்து அரசு அடுத்த மூன்று ஆண்டுகளில் உடல் பருமன் தொடர்பான பிரச்சனைகளுக்காக மட்டும் ரூ. 600 கோடி செலவழிக்கும் என கூறப்படுகிறது.