காது, மூக்கு போல தொப்புள் குத்துவது அதிகரிப்பு
சென்னை சற்று வித்தியாசமான நகரம். பழமையும் இருக்கும், புதுமையும் இருக்கும்.
அதை நிரூபிப்பது போல காது, மூக்கு குத்திக் கொள்ளும் பழக்கம், சென்னை நகர இளம் பெண்களிடம் அதிக அளவில் காணப்படுகிறது. அதேசமயம், தற்போது தொப்புளில் துளையிட்டுக் கொண்டு அதில் அழகிய ரிங்குகளை மாற்றுவதும் அதிகரித்து வருகிறதாம்.
தொப்புளில் மாட்டுவதற்கென்றே விதம் விதமான அழகிய ரிங்குகள் நகைக் கடைகளிளில் குவிந்து கிடக்கின்றன.
பியூட்டி பார்லர்கள் மற்றும் நகைக் கடைகளில் காது, மூக்கு மற்றும் தொப்புள் குத்திக் கொள்வதற்கான வசதிகள் இப்போது பெருகி விட்டன.
இதுகுறித்து காது, மூக்கு, தொப்புள் குத்தும் பொட்டிக் நடத்தும் சி.சுரேஷ் என்பவர் கூறுகையில், எனது பார்லருக்கு ஏராளமான பெண்கள் வந்து காது, மூத்து குத்திக் கொள்வதோடு, தொப்புள் குத்திக் கொள்வதிலும் ஆர்வம் காட்டுகின்றனர்.
முன்பு போல இப்போது வலிக்க வலிக்க யாரும், காது, மூக்கு குத்திக் கொள்வதில்லை. இப்போது அது எளிதாகி விட்டது. சிறிய துப்பாக்கி போன்ற சாதனத்தை வைத்துதான் நாங்கள் உடலில் துளையிடுகிறோம். அதில் வலி தெரியாது, மேலும், சுத்தமானதாகவும், சுகாதாரமானதாகவும் இருப்பதால், எந்தவித தொற்றும் ஏற்படாது.
எனது பார்லருக்கு தினசரி 40 வாடிக்கையாளர்கள் வருகின்றனர். எனது பார்லரிலேயே காது, மூக்கு மற்றும் தொப்புளில் மாட்டுவதற்கான அழகழகான வளையங்கள் விதம் விதமான டிசைனில் கிடைக்கின்றன.
சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை நகரப் பெண்களிடையே மூக்கு குத்துவது பிடிக்காத ஒன்றாக இருந்தது. ஆனால் இப்போது மூக்குடன் நி்ல்லாமல் தொப்புள் குத்திக் கொள்வதிலும் அவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர் என்கிறார்.
தொப்புள் குத்திக் கொள்வதில் ஆர்வம் இல்லாத சிலர், தொப்புளைச் சுற்றிலும் பச்சை குத்திக் கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனராம்.