ஜோதிடர் கிளப்பிய முனிஸ்வரன் புரளி!
திட்டக்குடி: ஜோதிடர் கிளப்பிய முனீஸ்வரன் பயத்தால், பள்ளிக்கு தங்களது குழந்தைகளை பெற்றோர்கள் அனுப்ப மறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திட்டக்குடியை அடுத்த ராமநத்தம் அருகே கண்டமத்தான் கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது.
இந்த பள்ளிக்குப் புதிய கட்டடம் கட்டுவதற்காக இடையூறாக இருந்த ஆலமரம் ஒன்று கடந்த சில தினங்களுக்கு முன்பு வெட்டப்பட்டது.
ஆலமரத்தை வெட்டியதால் அதில் இருந்த முனீஸ்வரன் ஆத்திரம் அடைந்து, அப் பள்ளிக்கு வரும் மாணவர்கள் இருவரையும் மாணவி ஒருவரையும் கொன்று விடுவார் என்று கொல்லிமலை ஜோதிடர் ஒருவர் தெரிவித்தார்.
இதனால் கலக்கம் அடைந்த பெற்றோர் திங்கள்கிழமை தங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்துவிட்டனர்.
இது குறித்து ஊராட்சி மன்றத் தலைவர் பரமசிவம், கிராம நிர்வாக அலுவலர் அரசன் ஆகியோர் கொல்லிமலை ஜோதிடரை ஊரைவிட்டுச் செல்லுமாறு உத்தரவிட்டனர்.
பின்பு, வீடுவீடாகச் சென்று பெற்ரோரைச் சந்தித்துப் பேசியதன் விளவாக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப சம்மதம் தெரிவித்தனர்.