திருவண்ணாமலை கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
அண்ணாமலையார் கோவில் அல்லது அருணாச்சலேஸ்வரர் கோவில் என அழைக்கப்படும் திருவண்ணாமலை கோவிலில் இன்று கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதிகாலை 5.25 மணிக்கு கோவிலில் கொடியேற்றப்பட்டது.
கோவில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு சாமி அம்மனுக்கு தங்க கவசம் சாற்றப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
விநாயகர், முருகன், சுவாமி, அம்மன், சண்டிகேசுவரர் ஆகியோர் வீதிஉலா வந்தனர். பின்னர் சன்னதி முன்பு உள்ள தங்க கொடி மரம் முன்பு சிறப்பு பூஜை நடந்தது.
அதனைத் தொடர்ந்து 62 அடி உயரம் உள்ள தங்க கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் மந்திரம் ஓத கோவில் குருக்கள் கார்த்திகை தீப கொடியேற்றினார். அப்பொழுது பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்று பக்தி கோஷம் எழுப்பினர்.
கொடியேற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜேந்திரன், எம்.எல்.ஏ.க்கள் பிச்சாண்டி, விஜயகுமார், நகர் மன்ற தலைவர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தீப விழா இன்று முதல் 10 நாட்கள் நடக்கிறது. தினமும் காலை, மாலை சுவாமிகள் மாடவீதிகளில் உலா வருவார்கள். 5-ம் நாள் ரிஷப வாகனம், 6-ம் நாள் வெள்ளித்தேர், 7-ம் நாள் ஐந்து மரத்தேர் நிகழ்ச்சி முக்கியமானதாகும்.
10-ம் நாளான டிசம்பர் 1-ந்தேதி காலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்படும். அன்று மாலை 6 மணிக்கு விழாவின் உச்ச நிகழ்ச்சியான மகாதீபம் 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்படுகிறது.
இந்த ஆண்டு தீபத் திருவிழாவைக் காண சுமார் 20 லட்சம் பக்தர்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து பக்த கோடிகளின் வசதிக்காக மாவட்ட நிர்வாகம், நகராட்சி சார்பில் குடிநீர் வசதி, சுகாதார வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய் யப்பட்டுள்ளன. தற்காலிக பஸ் நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.