2030-ல் செவ்வாய் கிரகத்துக்கு இந்திய விண்கலம்! - டாக்டர் அப்துல் கலாம்
டேராடூனில் ஒரு பள்ளி விழாவில் கலந்து கொண்டு மாணவர்களிடையே அப்துல் கலாம் பேசியதாவது:
2030-ம் ஆண்டு செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்ப முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். முற்றிலும் இந்தியத் தொழில்நுட்பத்துடன் இது சாத்தியமாகக் கூடியதே.
ஊழலை ஒழிக்க அவரவர் வீட்டில் இருந்தே பிரசாரத்தை ஆரம்பிக்க வேண்டும். இது தான் சிறந்த வழி ஆகும்.
கோடிக்கணக்கான மக்கள் வாழும் நாடு இது. உங்கள் தந்தை துரதிர்ஷ்டவசமாக ஊழல் புரிபவராக இருந்து நீங்கள் அவரிடம் ஊழல் செய்வதை விட்டுவிடும்படி கேட்டுக் கொண்டால் அதுதான் வீட்டில் இருந்தே ஊழலை ஒழிப்பதற்கு மிகச் சிறந்த வழியாகும். இது போன்று அனைவரும் செய்ய ஆரம்பித்துவிட்டால் ஊழல் என்பது இல்லாமல் போகும்..." என்றார் கலாம்.
கடந்த 2001-ம் ஆண்டு நிலவுக்கு சந்திராயன்-I அனுப்புவது குறித்து கலாம் இதே போன்றதொரு மாணவர் கூட்டத்தில்தான் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது அவர் மத்திய அரசின் அறிவியல் ஆலோசகராக இருந்தார்.