காமன்வெல்த் போட்டி துவக்க விழாவில் 'ஜெய் ஹோ' பாடுகிறார் ரஹ்மான்!
காமன்வெல்த் போட்டிக்கான மைய நோக்குப் பாடலை ஏ ஆர் ரஹ்மான்தான் உருவாக்கினார். இதற்காக அவருக்கு ரூ 5.5 கோடி சம்பளமாகத் தரப்பட்டது.
ஆனால் இந்தப் பாடல் திருப்தியாக இல்லை என்று பரவலாக அதிருப்தி கிளம்பியது. இதைத் தொடர்ந்து பாடலை ட்ரிம் செய்தார் ரஹ்மான்.
இந்நிலையில், ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ள தொடக்க விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் அவரது ஜெய் ஹோ பாடலையும், வந்தே மாதரம் ஆல்பத்தில் இடம் பெற்ற மா துஜே சலாம் பாடலையும் பாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசப்பிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மகாத்மாவுக்குப் பிரியமான 'வைஷ்ணவ ஜன தோ...' பாடலையும் அவர் பாட உள்ளார்.
தொடக்க விழாவில் மா துஜே சலாம் பாடல்தான் கடைசிப் பாடலாக இருக்கும் என்றும் காமன்வெல்த் போட்டி வட்டாரங்கள் தெரிவித்தன. தொடக்க மற்றும் நிறைவு விழாக்களுக்காக ரூ 300 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. சுமார் 10,000 கலைஞர்கள் இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளனர்.