பகவத் கீதைக்கு எதிரான வழக்கு: இந்தியா கவலை; ரஷ்யா வருத்தம்
பகவத் கீதை தீவிரவாதத்தை ஆதரிப்பதாகவும், ரஷ்யாவில் வேற்றுமைகளை விதைப்பதாகவும் கூறி சைபீரியாவில் உள்ள டாம்ஸ்க் நகர நீதிமன்றம் ஒன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கு ரஷ்ய நாட்டு அதிகாரிகளிடம் இந்திய அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த விஷயத்தில் ரஷ்ய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரஷ்ய உயர்நிலை அதிகாரிகளிடம் வலியுறுத்தியிருப்பதாகத் மாஸ்கோவிலுள்ள இந்தியத் தூதர் மல்ஹோத்ரா, தெரிவித்துள்ளார்.
ரஷ்யத் தூதர் வருத்தம்
இதற்கிடையே, இது போன்ற ஒரு நிகழ்வு ஏற்பட்டதற்கு, ரஷ்யா, வருத்தம் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கான ரஷ்யத் தூதர் அலெக்சான்டர் கடாகின், புனித நூல்கள் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்படுவது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல என்று தெரிவித்துள்ளார். மத நல்லிணக்கத்திற்குப் பெயர் பெற்ற நகரில், இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது விந்தையாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, இந்த வழக்கில், வரும் 28 ஆம் தேதி தீர்ப்பளிப்பதாக டாம்ஸ்க் நீதிமன்றம் அறிவித்துள்ளது.