துபாய் தமிழ்ச் சங்கத்தின் சித்திரைத் திருவிழா: வேலூர் எம்.பி. அப்துல் ரஹ்மான் பங்கேற்பு
துபாய்: துபாய் தமிழ்ச் சங்கம் நடத்திய சித்திரைத் திருவிழா மற்றும் சப்தஸ்வரங்கள் 2012 எனும் சிறப்பு நிகழ்ச்சி கடந்த 20ம் தேதி மாலை அல் தவார் ஸ்டார் சர்வதேசப் பள்ளியில் வெகு சிறப்பாக நடைபெற்றது.சித்திரைத் திருவிழாவிற்கு துபாய் தமிழ்ச் சங்க தலைவி ஜெயந்தி மாலா சுரேஷ் தலைமை வகித்தார். விழாவினை ஜெயந்தி மாலா சுரேஷ், பிருந்தா குமார், சந்திரா கீதாகிருஷ்ணன் மற்றும் கவிதா பிரசன்னா ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். அமீரக தேசிய கீதம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. தொடர்ந்து இன்று ஒரு தகவல் சொல்லப்பட்டது.
சங்க தலைவி ஜெயந்தி மாலா சுரேஷின் தந்தை மறைவுக்கு இரங்கல் அஞ்சலி செலுத்தப்பட்டது.
சிறப்பு விருந்தினராக வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் கலந்து கொண்டார். அவர் தனது உரையில், நான் உங்களில் ஒருவன் எனக் குறிப்பிட்டார். துபாய் தமிழ்ச் சங்கம், இந்திய சமூக நல மையத்துடன் சேர்ந்து செய்து வரும் சேவைகளைப் பாராட்டினார்.
இந்திய சமூக மையத்தின் கன்வீனராக செயல்பட்டு வரும் தமிழர் கே. குமார் இந்திய அரசின் பிரவாஸி பாரதிய சம்மன் விருதினைப் பெற்றுள்ளார். அவர் அமீரகத்தில் கஷ்டப்படும் இந்திய மக்களுக்கு ஆற்றி வரும் சேவைகள் அளப்பரியது. அமீரகத்தில் பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட நேரத்தில் அவருடைய பணிகளை பெருமிதத்துடன் நினைவு கூர்வதாக தெரிவித்தார். மேலும் டெல்லியில் நாடாளுமன்றப் பணிகளைக் காண அனைவரும் வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இந்திய சமூக நல மைய கன்வீனர் கே. குமார் மற்றும் துபாய் தமிழ்ச் சங்க துணைத் தலைவர் ஏ. லியாக்கத் அலி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இந்திய கன்சலேட் அலுவலர் ராமகிருஷ்ணன், பன்னூலாசிரியர் கவிஞர் ஏம்பல் தஜம்முல் முஹம்மது, சென்னை முஸ்லிம் மீடியா டிரஸ்டின் மில்லத் இஸ்மாயில், தட்ஸ் தமிழ் ஒன் இந்தியா அமீரக செய்தியாளர் முதுவை ஹிதாயத் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து கௌரவிக்கப்பட்டனர்.
ஆண்டறிக்கையினை பொதுச் செயலாளர் ஜெகந்நாதனும், வருடாந்திர வரவு செலவு அறிக்கையினை பொருளாளர் கீதா கிருஷ்ணனும் வாசித்தனர்.
துபாய் தமிழ்ச் சங்க அங்கத்தினர்கள் பங்கேற்று வழங்கிய சப்தஸ்வரங்கள் 2012 எனும் சிறப்பு இசை நிகழ்ச்சி பார்வையாளர்களை பரவசப்படுத்தும் வகையில் நடைபெற்றது.
இணைப் பொருளாளர் சுந்தர் நன்றியுரை நிகழ்த்த இரவு உணவிற்குப் பின் நிகழ்ச்சி நிறைவுற்றது.