விஷ்ணுபுரம் விருதுகள் 2012: வழங்குகிறார் இசைஞானி இளையராஜா
தமிழின் மூத்த படைப்பாளிகளைக் கவுரவிக்கும் வகையில் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் சார்பில் விஷ்ணுபுரம் விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. கடந்த 2010ம் ஆண்டு முதல் வழங்கப்படும் இந்த விருது பாராட்டு கேடயம் மற்றும் ரூ.50,000 ரொக்கத்தை உள்ளடக்கியது.
2010ம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருது எழுத்தாளர் ஆ.மாதவன் அவர்களுக்கும், 2011ம் ஆண்டிற்கான விருது எழுத்தாளர் பூமணி அவர்களுக்கும் வழங்கப்பட்டது.
இந்நிலையில் 2012ம் ஆண்டிற்கான விருதுக்கு கவிஞர் தேவதேவன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். விருது வழங்கும் விழா வரும் 22ம் தேதி கோவை ஆர்.எஸ்.புரம் மாநாகராட்சி கலையரங்கில் நடைபெறுகிறது. விழாவுக்கு முன்னிலை வகிக்கும் இசைஞானி இளையராஜா தேவதேவனுக்கு விருதை வழங்கி கௌரவிக்கிறார்.
விழாவில் நாஞ்சில் நாடன், கல்பற்றா நாராயணன், ஜெயமோகன், விமர்சகர் மோகனரங்கன், இயக்குனர் சுகா, ராஜகோபாலன் உள்ளிட்ட பிரபல எழுத்தாளர்கள் கலந்துகொண்டு தேவதேவனை வாழ்த்த இருக்கிறார்கள்.