
நாட்டின் முதல் குடியரசுத் தலைவரான டாக்டர் பாபு ராஜேந்திர பிரசாத், தனக்கு சேவை செய்த நர்ஸ் ஒருவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்க பரிந்துரைத்தார். ஆனால் அந்த நர்ஸைத் தேடிக் கண்டுபிடிப்பதற்குள் அதிகாரிகளுக்குப் போதும் போதுமென்றாகி விட்டது என்று பிரபல பத்திரிக்கையாளர் குல்தீப் நய்யார் தனது பியான்ட் தி லைன்ஸ் என்ற சுயசரிதை நூலில் கூறியுள்ளார்.
அந்த சுவாரஸ்யமான பகுதி..
பத்ம விருதுகள் பெறுவோரை இறுதி செய்வது தொடர்பான ஆலோசனையில் பிரதமரும், உள்துறை அமைச்சரும் தீவிரமாக இருந்தனர். பட்டியலை இறுதி செய்து குடியரசுத் தலைவர் டாக்டர் பாபு ராஜேந்திர பிரசாத்துக்கு அனுப்பி வைத்தனர். அப்போது எதிர்பாராத வகையில் ஒரு திருத்தத்தைக் கூறினார் ராஜேந்திர பிரசாத்.
தென் மாநிலத்தைச் சேர்ந்த செல்வி லாசரஸ் என்று ஒரு பெயரை அதில் அவர் சேர்த்தார். அவரே அப்பெயரையும் பட்டியலில் கைப்பட எழுதினார். அப்போது யார் இந்த லாசரஸ் என்று யாருக்குமே தெரியவில்லை. சென்னையில் லாசரஸ் என்ற பெயரில் ஒரு கல்வியாளர் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்தான் அந்த விருது பெறப் போகிறவர் என்று நினைத்து சென்னைக்குப் போன் செய்து லாசரஸுக்குத் தகவல் தெரிவித்தனர்.
பின்னர் திருத்தப்பட்ட பட்டியலை மீண்டும் ராஜேந்திர பிரசாத்துக்கு அனுப்பினர். ஆனால் பட்டியலைப் பார்த்த அவர், இந்த லாசரஸ் இல்லை, இவர் ஒரு நர்ஸ் என்று கூறி திருப்பி அனுப்பினார்.
இதனால் குழப்பம் ஏற்பட்டது. அப்போது ராஜேந்திர பிரசாத்தின் உதவியாளர் கூறுகையில், இந்த லாசரஸ் ஒரு நர்ஸ். ஆந்திர மாநிலம் விஜயவாடாவிலிருந்து ஹைதராபாத்துக்கு ராஜேந்திர பிரசாத் பயணித்தபோது உடல் நலக் குறைவு ஏற்பட்டது. அப்போது இந்த நர்ஸ்தான் அவருக்கு பல உதவிகளைச் செய்து உடல் நலக்குறைவை சரி செய்தார் என்றார்.
இதையடுத்து அந்த நர்ஸைக் கண்டுபிடித்து தொடர்பு கொண்டு உங்களுக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டதாம். இதையடுத்து சென்னை லாசரஸுக்கும், ஆந்திர நர்ஸ் லாசரஸுக்கும் ஆளுக்கு ஒரு பத்மஸ்ரீ விருதைக் கொடுத்தனர்.










