பால்குடம் காவடியுடன் அமெரிக்காவில் பங்குனி உத்திர விழா.. ஏராளமான தமிழர்கள் பங்கேற்பு!
டல்லாஸ்: அமெரிக்காவில் பால்குடம், காவடி எடுத்து தமிழர்கள் பங்குனி உத்திரம் கொண்டாடினார்கள்.
தென் தமிழகத்தில் பங்குனி உத்திரம் கிராமம் தோறும் பெரிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அய்யனார் கோவிலில் கிடா வெட்டி, கறி சோறு, பிரியாணி படைத்து குடும்பத்தோடு கலந்து கொள்ளும் ஒரு விழா அது.
சென்னை, கோவை, சேலம், திருச்சி என்று வடக்கே தொழில் நிமித்தம் குடியேறியவர்களும், பங்குனி உத்திரத்திற்கு சொந்த ஊருக்கு செல்வதை கடமையாக கொண்டுள்ளனர்.
தவிர முருகன் கோவில்களிலும் பங்குனி உத்திரம் சிறப்பாக கொண்டாடப் படுகிறது. திருச்செந்தூர் உள்ளிட்ட அறுபடை வீடுகளிலும் மருதமலை, சிக்கல் உள்பட அனைத்து முருக தலங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. திருச்செந்தூரில் பால்குடம் சுமந்தும், காவடி எடுத்தும் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுகிறார்கள்.
இப்படி ஒரு விழா அந்நிய மண்ணில் நடந்தால் எப்படி இருக்கும் என்று யோசிக்க முடிகிறதா? டல்லாஸ் இந்து கோவிலில் தொடர்ந்து வருடாவருடம் பங்குனி உத்திர விழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
ஏப்ரல் 7, சனிக்கிழமைகாலை 9 மணிக்கு மங்கள இசையுடன் விழா ஆரம்பமானது. விநாயகர் பூஜை முதல் அனைத்து நிகழ்ச்சிகளையும் மகாலிங்கம் சாஸ்திரிகள் தலைமையேற்று நடத்தி வைத்தார். விநாயகர் சன்னதியில் இருந்து பால்குடம், காவடிகளை எடுத்துக்கொண்டு முருகன் சன்னதியில் வழிபாடு செய்து விட்டு, பக்தர்கள் ஆலய வளாகத்தில் ஊர்வலமாக சுமந்து வந்தனர்.
பக்தர்களின் பால்குடங்கள் சன்னதிக்கு வந்த பிறகு முருகனுக்கு அபிஷேகம் செய்யப் பட்டது. திருச்செந்தூர் முருகனுக்கு செய்வதைப் போல் பால், பழரசம், தேன், சந்தனம், தயிர் உள்ளிட்ட அபிஷேகம் நடந்தது.
விழாவின் சிறப்பம்சமே மயிலிறகு கொண்டு அலங்கரிக்கப்பட்ட் காவடிகள் தான். அமெரிக்காவில் இந்த காவடிகளை பக்தர்கள் தோளில் சுமந்து கொண்டு ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ என்ற கோஷத்துடன் வலம் வரும் காட்சியை காண பரவசமாக இருந்தது.
எங்கு சென்றாலும் நாங்கள் தமிழ்க்குடும்பம்தான் என்று பறை சாற்றும் வகையில் சிறுவர்களும் காவடி சுமந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
விழாவில் இரு நூறுக்கும் அதிகமான தமிழர்கள் கலந்து கொண்டார்கள். மகா பிரசாதமாக அனைவருக்கும் தென்னிந்திய மதிய உணவு பரிமாறப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை அறங்காவலர் குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தியின் ஆலோசனையுடன், முருக சேவகர் சுந்தர்ராஜன் தலைமையில் ரகுநாத் மற்றும் கந்த சஷ்டி குழுவினர் பாலமோகன், குமார் ராம், சரவணன், ரவி ராசப்பன், ரமேஷ் குமரப்பன், மனோகரன், முத்துக்குமரன், குமரவேல், விஜயா, தேன்மொழி, பிருந்தா, சுகன்யா உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.
-டல்லாஸிலிருந்து தினகர்.