டெக்சாசில் தமிழ் முஸ்லிம்களின் ஈத் பெருநாள் ஒன்றுகூடல்: நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு
டெக்சாஸ்: டெக்சாசில் வாழும் தமிழ் முஸ்லிம்கள் நோன்புப் பெருநாளை சிறப்பாகக் கொண்டாடினர்.
அமெரிக்காவில் கடந்த 19ம் தேதி அன்று நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட்டது. தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளாகிய டெக்சாஸ் மாநிலத்தில் அமைந்துள்ள 'ப்ளேனோ' பள்ளியில் சுமார் 7,000 பேரும், மற்றொரு பகுதியாகிய ‘இர்விங்' பள்ளியில் சுமார் 5,000 பேரும் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டனர்.
பெருநாள் தொழுகைக்குப் பிறகு இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த உலக தமிழ் முஸ்லிம்கள் ஒன்றுகூடி பெருநாள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
சுமார் பத்து ஆண்டுகளாக இப்பகுதிகளில் வாழும் தமிழ் முஸ்லிம்களை ஒன்றிணைத்து சமூக சேவை செய்து வரும் 'டீ.எப்.டபிள்யு நண்பர்கள்' அமைப்பின் சார்பில் அன்றிரவு 'கஸ்ரா' உணவகத்தில் நடைபெற்ற ஈத்- பெருநாள் விருந்தில் 200க்கும் மேற்பட்ட தமிழ் முஸ்லிம்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அதிரை ஷேய்க் தாவூத் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.