கோபப்பட்டா ஹார்ட் அட்டாக் வரும்! எச்சரிக்கை ரிப்போர்ட்
அதிகமாக கோபத்தை வெளிப்படுத்தும் நபர்களுக்கு மாரடைப்பு, பக்கவாதம் வரும் வாய்ப்பு அதிகம் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
தானத்தில் சிறந்தது நிதானம் என்று நம்முன்னோர்கள் தெரிவித்துள்ளனர். நிதானத்தை இழந்து கோபத்தை வெளிப்படும் நபர்கள் மாரடைப்பு அல்லது பக்கவாதத்தால் பாதிக்கப்படுகின்றனர். சமீபத்திய ஆய்வுகள் இதனை நிரூபித்துள்ளன.
இது தொடர்பாக அமெரிக்காவில் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் பல்வேறு அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் தெரியவந்துள்ளன.
இரண்டு மணிநேரத்தில் அட்டாக்
ஒருவருக்கு பெருங்கோபம் வந்த இரண்டு மணி நேரத்திற்குள் அவருக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு ஐந்து மடங்கு அதிகமாக உள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
பக்கவாத அபாயம்
அதேபோல பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு மூன்று மடங்கு அதிகரிப்பதாகவும் ஹார்வர்ட் பல்கலைகழகத்தின் பொது சுகாதார பிரிவின் ஆராய்ச்சிக் குழு கண்டறிந்துள்ளது.
அதிக கோபம் ஆபத்து
இது குறித்து ஆயிரக்கணக்கான நோயாளிகளிடம் இருந்து எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் இந்த உண்மை தெரியவந்தது. ஒருவர் தன் வாழ்நாளில் எந்த அளவு இந்த மாதிரி அதிகம் கோபப்படுகிறாரோ, அந்த அளவுக்கு அவர் அவர் பாதிக்கப்படுவார் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அடிக்கடி கோபம்
அடிக்கடி கோபப்படுபவர்களுக்கு இந்த நோய்கள் வரும் அபாயம் அதிகரிக்கிறது என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
அமைதியே ஆனந்தம்
மக்கள் அமைதியாகுவதற்கு உதவும் வகையில் மருந்துகளோடு சேர்த்து, உளவியல் சிகிச்சைகளும் அளிப்பது இவ்வகையான தாக்குதல்களை குறைப்பதற்கான ஒரு சிறந்த முயற்சியாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
எல்லாமே நஷ்டம்தான்
அதனால்தான் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே ‘ஆறுவது சினம்' என்று பாடிச்சென்றுள்ளார் ஔவையார். கோபத்தோடு எழுபவன் நஷ்டத்தோடு உட்காருவான் என்றும் பலர் கூறக்கேட்டிருப்போம். கோபப்பட்டு உடலை கெடுத்துக்கொள்வதை விட அமைதியாய் இருந்து ஆனந்தமாய் வாழுங்களேன் என்கின்றனர் ஆய்வாளர்கள்.