கனடா தமிழ் இலக்கிய அமைப்பின் ”இயல் விருது” விழா…
கனடா: கனடாவின் தமிழ் இலக்கிய அமைப்பின் இயல் விருது வழங்கும் விழாவானது ஜூன் 28 அன்று டொரண்டோவில் அமைந்துள்ள ராடிஸன் ஹோட்டலில் நடைபெற்றது.
இவ்விழாவில் இலக்கிய சாதனைக்கான இயல் விருதானது தியோடர் பாஸ்கரன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. கனடா எழுத்தாளார் ஷ்யாம் செல்வதுரை இவ்விருதை வழங்கி கவுரவித்தார்.
இந்த விருது கேடயமும், 2500 டாலர் பணப்பரிசும் கொண்டது. தமிழ் திரைப்பட வரலாற்று அறிஞர் மற்றும் சூழலியல் ஆர்வலரான தியோடர் பாஸ்கரன் இந்த விருதைப் பெறும் 14 ஆவது சாதனையாளர் ஆவார். இதன் பின் மற்ற விருதுகளும் வழங்கப்பட்டன.
இலக்கியப் பிரிவில் "ஜின்னாவின் டைரி" நாவலுக்காக கீரனூர் ஜாகிர் ராஜாவுக்கும், "ஸ்ரீதரன் கதைகள்" தொகுப்புக்காக ஸ்ரீதரனுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
"நம்பிக்கைகளுக்கு அப்பால்" நூலுக்காக மு.புஷ்பராஜனுக்கும், கவிதைப் பிரிவில் "சிவாஜி கணேசனின் முத்தங்கள்" தொகுப்புக்காக கவிஞர் இசைக்கும், சுந்தர ராமசாமி நினைவாக நிறுவப்பட்ட "கணிமை விருது" மணி மணிவண்ணனுக்கும் வழங்கப்பட்டன.
மொழிபெயர்ப்பு பிரிவில் "ஓநாய் குலச் சின்னம்" ஆங்கில நாவலின் தமிழ் மொழிபெயர்ப்புக்காக சி.மோகனுக்கும், தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்ட One Part Woman நாவலுக்கு அனிருத்தன் வாசுதேவனுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
மாணவர் கட்டுரைப் போட்டியில் அருந்ததி ரொட்ரிகோவும், எலினா ரொபோறஸும் பரிசுகள் பெற்றனர்.. இந்த விழாவுக்கு பல நாடுகளில் இருந்து எழுத்தாளர்களும், கல்வியாளர்களும் ஆர்வலர்களும் வருகை தந்து சிறப்பித்தார்கள்.