துபாய் ஈமான் அமைப்பின் இஃப்தார் நிகழ்ச்சியில் இந்திய கன்சல் ஜெனரல் பங்கேற்பு
துபாய்: துபாய் ஈமான் அமைப்பின் இஃப்தார் நிகழ்ச்சியில் இந்திய கன்சல் ஸ்ரீ அனுராக் பூஷன் 15.07.2014 அன்று கலந்து கொண்டு சிறப்பித்தார்.
துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் இஃப்தார் நிகழ்ச்சி துபாய் தேரா லூத்தா ஜாமிஆ மஸ்ஜிதில் (குவைத் பள்ளி ) தினமும் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க துபாயில் இவ்வாண்டு புதிய இந்திய கன்சல் ஜெனரலாக பொறுப்பேற்ற ஸ்ரீ அனுராக் பூஷனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
ஈமான் அமைப்பின் அழைப்பினை ஏற்றுக் கொண்ட அனுராக் பூஷன் 15.07.2014 அன்று நடந்த இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவரை ஈமான் அமைப்பின் துணைத் தலைவர் அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லா, பொதுச் செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ லியாக்கத் அலி, துணைப் பொதுச் செயலாளர் திருப்பனந்தாள் அல்ஹாஜ் ஏ முஹம்மது தாஹா உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்றனர்.
பள்ளி மற்றும் பள்ளியினைச் சுற்றி அமர்ந்திருந்த நோன்பாளிகளைப் பார்த்து தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார் அனுராக் பூஷன். இத்தகைய மாபெரும் இஃப்தார் நிகழ்ச்சியை தமிழக நோன்புக் கஞ்சியுடன் வழங்கி வரும் ஈமான் அமைப்பின் சேவைகளைப் பாராட்டினார்.
ஆகாஷ் அருள், அருண் உள்ளிட்ட பள்ளி மாணவர்கள் ஈமான் அமைப்பின் இஃப்தார் நிகழ்ச்சியில் தன்னார்வ தொண்டர்களாக பங்கேற்று நோன்புக் கஞ்சி வழங்குவதில் உறுதுணை புரிந்தனர். இம்மாணவர்களின் சேவைகளைப் பாராட்டி சான்றிதழ் வழங்கி கௌரவித்தார் இந்திய கன்சல் ஜெனரல்.
நிகழ்ச்சியில் இந்திய சமூக நல அமைப்பின் கன்வீனர் கே. குமார், காயிதே மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளர் அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.