துபாயில் இந்திய துணை கன்சல் ஜெனரலுக்கு பாராட்டு விழா: டிடிஎஸ் இவென்ட்ஸ் ஏற்பாடு
துபாய்: துபாய் டிடிஎஸ் இவென்ட்ஸ் சார்பில் விரைவில் விடைபெற்றுச் செல்ல இருக்கும் இந்திய துணை கன்சல் ஜெனரல் அசோக் பாபு அவர்களுக்கு பாராட்டு மற்றும் பிரிவு உபசார விழா 21.06.2014 அன்று மாலை அரேபியன் பார்க் ஹோட்டலில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு டிடிஎஸ் இவென்ட்ஸ் அமைப்பின் தலைவர் ஜெயந்தி மாலா சுரேஷ் தலைமை வகித்தார். அவர் தனது தலைமையுரையில் துபாயில் மூன்று ஆண்டுகள் பணியாற்றிவிட்டு பணிமாறுதல் பெற்றுச் செல்ல இருக்கும் இந்திய துணை கன்சல் ஜெனரல் அசோக் பாபு அவர்கள் தமிழகத்தின் மதுரை நகரைச் சேர்ந்தவர். மிகவும் இளம் வயதில் பன்முக திறமைகளைக் கொண்டவர்.
பிற மாநில தொழில் அதிபர்கள் மற்றும் நண்பர்களுடன் உரையாடும் போது அசோக் பாபு அவர்களின் திறனைக் கண்டு வியந்து பாராட்டும்போது அவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் எனக் குறிப்பிடும் போது தமிழ் மக்களின் பெருமைக்குக் காரணமாக திகழ்ந்து வருவது அனைத்து தமிழர்களுக்கும் மகிழ்வளிப்பதாக குறிப்பிட்டார்.
டிடிஎஸ் இவென்ட்ஸ் நிர்வாகி ஏ. முஹம்மது தாஹா வரவேற்புரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில், அசோக்பாபு அவர்களுடன் பழகும் போது கன்சுலேட் அதிகாரியுடன் பழகுவது போன்று இல்லாது ஏதோ நமது சகோதரருடன் பேசுவது போன்றதொரு அபிப்ராயத்தை ஏற்படுத்துவதாகக் கூறினார்.
டிடிஎஸ் இவென்ட்ஸ் குழுவினர் பிரசன்னா, சுந்தர், விஜயேந்திரன், விஜயராகவன், பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் குறிப்பிடும் போது, கன்சுலேட் என்றதும் நாமெல்லாம் நுழைய முடியுமா என்றெல்லாம் எண்ணியிருந்த ஒரு நிலை மாறி ஒரு சகோதரர் இங்கு பணிபுரிகிறார் என்றதொரு நிலையினை ஏற்படுத்தியுள்ளார் துணை கன்சல் ஜெனரல் அசோக் பாபு.
அசோக் பாபு மற்றும் அவரது மனைவி வித்யா ஆகியோர் தங்களது குடும்பத்தினரைப் பிரிவது போன்ற ஒரு நிலையினை ஏற்படுத்தினாலும் உலகம் மிகச் சிறியது எனவே மீண்டும் சந்திக்கும் வாய்ப்பினை இறைவன் நமக்கு விரைவில் ஏற்படுத்துவான் எனக் குறிப்பிட்டனர்.
அதனைத் தொடர்ந்து அசோக்பாபு அவர்கள் பொன்னாடை மற்றும் நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
அமீரகத்தில் நடக்கும் தமிழ் நிகழ்ச்சிகளை உலகத் தமிழர்கள் அறியச் செய்யும் செய்தியாளர் முதுவை ஹிதாயத்திற்கு அசோக் பாபு நினைவுப் பரிசு வழங்கினார்.
நிகழ்ச்சியில் டிடிஎஸ் இவென்ட்ஸ் குடும்பத்தினர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.