துபாயில் மிஹ்ராஜ் இரவு சிறப்பு தொழுகை
துபாய்: துபாயில் மிஹ்ராஜ் இரவை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது.
நபிகள் நாயகம் விண்ணுலகப் பயணம் மேற்கொண்டு இறைவனை தரிசித்து, முஸ்லிம்களின் தலையாய கடமையான தொழுகையைப் பெற்று வந்த நிகழ்ச்சிக்கு இஸ்ரா வல் மிஹ்ராஜ் என்று சொல்லப்படுகின்றது.
துபாயில் உள்ள கோட்டைப் பள்ளியில் 25-05-2014 அன்று இரவு 9.00 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை, இஸ்ரா வல் மிஹ்ராஜ் புனித தின சிறப்பு சொற்பொழிவு, சிறப்பு பிரார்த்தனை தொழுகை, பாவ மன்னிப்பு மற்றும் இறை தியானம் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. துவக்கமாக பள்ளி இமாம் உருது மொழியில் உரையாற்றினார்.
இந்தியாவிலிருந்து சிறப்பு விருந்தினராக வந்திருந்த காயல்பட்டினம் மௌலானா மௌலவி அல்ஹாஜ் அஹ்மது அப்துல் காதிர் மஹ்லரி சிறப்புரை ஆற்றினார். சொற்பொழிவைத் தொடர்ந்து தஸ்பீஹ் தொழுகை என்று சொல்லப்படும் சிறப்பு பிரார்த்தனை தொழுகையும், தொடர்ந்து பாவ மன்னிப்பு மற்றும் இறை தியானம் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இறுதியாக இறை பிரார்த்தனையோடு நிகழ்ச்சிகள் நிறைவுற்றன. நள்ளிரவு வரை நடைபெற்ற தொழுகை மற்றும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் ஆயிரக் கணக்கான முஸ்லிம்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். தொழுகையின் போது பள்ளியில் இடம் கிடைக்காது படிக்கட்டுகளிலும் மக்கள் நின்று தொழுதனர்.
நிகழ்விற்கான ஏற்பாடுகளை ஸுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவை நிர்வாகிகள், கீழக்கரை ஒஃபூர் தலைமையில் மஃரூஃப், இஸ்லாமுத்தீன், ஹமீது ரஹ்மான், ஜமால் முஹ்யித்தீன், ஜலால், ஷாஹுல் ஹமீது உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.