ரமலானே வருக, ரஹ்மத்தை தருக: குவைத்தில் ரமலான் வரவேற்பு சிறப்பு நிகழ்ச்சி
குவைத்: குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்யும் "9ம் ஆண்டு புனித ரமலான் வரவேற்பு" சிறப்பு நிகழ்ச்சி வரும் 27ம் தேதி நடைபெறுகிறது.
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic), குவைத் வாழ் தமிழ் இஸ்லாமிய மக்களுக்காக புனித ரமலான் மாத வருகையையொட்டி அம்மாதத்தின் சிறப்புகள், நோன்பின் மாண்புகள், ஆற்ற வேண்டிய கடமைகள், தவிர்க்க வேண்டிய செயல்பாடுகள் மற்றும் வணக்க வழிபாடுகள் போன்றவற்றை தெளிவான வகையில் எளிய முறையில் அழகிய தமிழில் எடுத்துரைக்கும் விதமாக சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
இந்த நிகழ்ச்சி வரும் 27ம் தேதி குவைத் கைத்தான் பகுதியில் உள்ள கே-டிக் தமிழ் குத்பா பள்ளிவாசலில் நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கு குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் தலைவர் மவ்லவீ எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ தலைமை வகிக்கிறார்.
சங்கத்தின் பொதுச் செயலாளர் மவ்லவீ அஃப்ழலுல் உலமா அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ எம்.ஏ. அவர்கள் ஜும்ஆப் பேருரையும், சங்கத்தின் துணை தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் காரீ எம். முஹம்மது நிஜாமுத்தீன் பாகவீ அவர்கள் சிறப்புரையும் ஆற்றுகிறார்கள்.
பெண்களுக்கு தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.