அறிந்தும் அறியாமலும் - 18: ‘மதம்’ கொண்ட மனிதர்கள்!
-சுப. வீரபாண்டியன்
‘புற்று நோயை விட, லஞ்சத்தை விட, சாதி கொடியது என்று எழுதுகின்றீர்களே, மதம் பற்றிய உங்கள் பார்வை என்ன?' என்று ஒரு நண்பர் வினா எழுப்பினார்.
நான் கடவுள் நம்பிக்கையற்றவன் என்னும் பொழுதே, மத நம்பிக்கையும் அற்றவன் என்பது தெளிவாகி விடுகின்றது. கடவுளும், மதமும் பிரிக்க இயலாவண்ணம் பிணைக்கப்பட்டுள்ளதென்பதை நாம் அறிவோம்.
எனினும், சாதியையும், மதத்தையும் ஒரே தட்டில் வைத்து நாம் பார்க்க முடியாது. இரண்டிற்குமிடையில் குறிப்பிடத்தக்க சில வேறுபாடுகள் உள்ளன. மதம் என்பது, அவரவர் நம்பிக்கையையும், சொந்த அனுபவத்தையும் சார்ந்தது. சில குறிப்பிட்ட வழிமுறைகளே தம்மைக் கடவுளிடம் கொண்டு சேர்க்கும் என்ற நம்பிக்கையில் மக்கள் மதங்களைத் தழுவுகின்றனர். சில வேளைகளில், அந்த நம்பிக்கை பொய்த்துப் போகுமாயின், வேறு மதத்திற்கு மாறிவிடுகின்றனர். ஆதலால்தான் மதம் தங்களின் நம்பிக்கை என்றும், வாழ்க்கை முறை என்றும் சிலர் கூறுகின்றனர்.
‘மதம் ஓர் அபின்' என்று கூறும் கார்ல் மார்க்ஸ் கூட, அதே கட்டுரையில் (1843இல் ஹெகலின் கோட்பாடுகள் பற்றிய திறனாய்வு), "மதம் என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் ஏக்கப் பெருமூச்சு, இதயமற்ற உலகின் இதயம்" என்றும் கூறியுள்ளார். இறுதியாக, அது "வெகுமக்களுக்கான போதை மருந்து" (‘Opium of the masses') என்று குறிப்பிடுகின்றார்.
போராடி, நியாயங்களைப் பெறக்கூடிய வலிமை இல்லாத ஏழை, எளிய மக்கள், கடவுளையும், மதத்தையும் நோக்கித் தள்ளப்படுகின்றனர். கடவுள்தான் நம்மைக் காப்பாற்றுவார் என எண்ணி ஆறுதல் அடைகின்றனர். அதுவே அவர்களின் போதைப் பொருளாகிறது. மதங்கள் மக்களை மயக்கத்தில் ஆழ்த்தி வைத்துக் கொள்கின்றன என்பதே கார்ல் மார்க்சின் கருத்தாக உள்ளது.
என்னதான் போதைப் பொருளாக இருந்தாலும், தெளிவு பெற்று அதனிடமிருந்து நம்மால் விடுபட முடியும். ஒரு மதத்திலிருந்து இன்னொரு மதத்திற்கு மாறிக்கொள்ளவும் இயலும். ஆனால் சாதி அப்படிப்பட்டதன்று. சாதியை நாம் தேர்ந்தெடுக்கவில்லை. அது நம் மீது, நம் பிறப்பின் அடிப்படையில் திணிக்கப்பட்டது. நாம் விரும்பினாலும், முயன்றாலும் வேறு சாதிக்கு மாற முடியாது. நமக்கு மட்டுமின்றி, நம் தலைமுறைகளுக்கும் சாதி முத்திரை தொடர்கிறது. அந்த முத்திரை சிலருக்குச் சமூக அதிகாரத்தையும், மிகப் பலருக்குச் சமூக இழிவையும் பெற்றுத் தருகிறது. எனவே சாதி என்பது உலகின் கொடிய வடிவங்களில் ஒன்று.
இவ்வாறு எழுதுவதன் மூலம், மதத்திற்கு நாம் ஏற்பிசைவு எதனையும் வழங்கவில்லை. மதங்களின் பெயரால் நடைபெற்ற கொடிய போர்களையும், அப்போர்களில் மாண்டுபோன மக்களின் பெரும் எண்ணிக்கையையும் நாம் மறந்து விடவுமில்லை.
உலகில், இரண்டு நாடுகளுக்கிடையிலே நடந்த போர்களில் இறந்தவர்களைக் -காட்டிலும், இரண்டு மதங்களுக்கு இடையிலான போர்களில்தாம் கூடுதல் மக்கள் இறந்து போயுள்ளனர். மதங்களுக்கு இடையிலான போர்களும், சண்டை, சச்சரவுகளும் ஓயவே இல்லை. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி, இன்று வரை அந்தக் கலவரக் கூச்சல் கேட்டுக்கொண்டேதான் இருக்கிறது - அண்மையில் சங்கர மட பக்தர்களுக்கும், ஷீரடி சாய்பாபா பக்தர்களுக்கும் நடைபெற்ற மோதல் வரையில்!
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நடைபெற்ற சிலுவைப் போர், வரலாற்றின் பக்கங்களைக் குருதியில் நனைக்கிறது. 1095இல் ஜெருசலேத்தில் தொடங்கிய முதல் சிலுவைப்போர், இடைவிட்டு, இடைவிட்டு 200 ஆண்டுகள் நடைபெற்றது. அந்த இரு நூற்றாண்டுகள், ஆறு மாபெரும் யுத்தங்களையும், ஏழெட்டுச் சிறிய போர்களையும் கண்டன.
1099ஆம் ஆண்டு, 40 நாள்கள் முற்றுகை நடத்தி, சிலுவை வீரர்கள் ஜெருசலேத்தைக் கைப்பற்றினர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்னும் எந்த வேறுபாடும் இன்றி, இரண்டு நாள்கள் தொடர்ந்து படுகொலைகள் நடந்தன. பெரும்பான்மையான முஸ்லீம் சமயத்தினர் கொல்லப்பட்டு விட்டனர். முஸ்லீம்களுக்குத் துணை நின்ற யூதர்களும் படுகொலைக்கு ஆளாயினர்.வேறு வழியின்றி, கடவுள் நம்மைக் காப்பாற்றுவார் என்ற மயக்கத்தில், யூதக் கோயில் ஒன்றில் வழிபாடு செய்வதற்காகப் பெருந்திரளாக யூதர்கள் அங்கு கூடினர். சிலுவைப் போர் வீரர்கள், அந்த யூதக் கோயிலைச் சுற்றி வளைத்துத் தீ வைத்தனர். அங்கு கூடியிருந்த யூத மக்கள் அனைவரும், கொத்துக் கொத்தாகத் தீயில் வெந்து மடிந்தனர்.
இந்தக் கொடுமைகள் நடந்து ஏறத்தாழ ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர், போப் தங்களின் மன்னிப்பைக் கோரினார்.
ஒரே இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த சன்னி, ஷியா பிரிவினரிடையே முப்பதாண்டுகள் தொடர்ந்து போர் நடந்தது. இன்றைக்கும் அந்தப் பகை முடிந்து போய்விடவில்லை.