சிட்னி முருகன் கோவிலில் 10 நாட்கள் வருடாந்திர மஹோற்சவம்
சிட்னி: ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி மாநகரில் வைகாசிக் குன்றில் (Mays Hill) அமைந்து உள்ள சிட்னி முருகன் ஆலயத்தின் வருடாந்திர மஹோற்வசம் சனிக்கிழமை (08.03.2014) கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறவுள்ளது.
இந்த வருட மஹோற்சவத்தை சிட்னி முருகன் ஆலயத்தின் சிவாச்சாரியராகிய யாழ்ப்பாணம் சிவஸ்ரீ குகசாமி லவக்குருக்கள் முன்னின்று நடத்த உள்ளார்.
மஹோற்சவத்தின் போது ஆலயத்தில் மங்கள இசையை வழங்குவதற்காக ஈழத்தின் புகழ் பெற்ற கலைஞர்களான சின்ன காரைக்குறிச்சி என்று அழைக்கப்படும் சு.பாலமுருகன், பிரபல நாதஸ்வர கலைஞர் பஞ்சமூர்த்தியின் புதல்வன் குமரேசன், ஈழத்தின் தலைசிறந்த தவில் மாமேதை தட்சணாமூர்த்தியின் புதல்வன் உதயசங்கர், பாலமுருகனின் சகோதரன் சு.செந்தில்நாதன் ஆகியோர் வருகை தரவுள்ளனர்.
10 நாட்கள் திருவிழா
8ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மார்ச் 17ம் வரையான 10 நாட்களும் நடைபெறவுள்ள மஹோற்சவத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற உள்ளன. ஒவ்வொரு நாள் திருவிழாக்களும் சிட்னியில் பிரதேச வாரியாக வாழ்ந்து வாழும் பக்தர்களுக்கு ஒதுக்கி கொடுக்கப்பட்டுள்ளன.
மாம்பழத்திருவிழா
மாம்பழத் திருவிழா, வேட்டைத் திருவிழா, தேர் திருவிழா, தேர்த் திருவிழா (16.03.14), தீர்த்தத் திருவிழா (17.03.14) ஆகியவையும் வெகுவிமரிசையாக நடைபெறவுள்ளன.
வள்ளி தெய்வானை திருமணம்
முருகன் வள்ளி-தெய்வானை திருமண நிகழ்வாக பூங்காவனத் திருவிழா மார்ச் 18ம் தேதி நடைபெறும். இதனை சிட்னியில் பிரதேச வாரியாக வாழ்ந்து வரும் இளையோர்கள் சிறப்புற நடத்துவர்.
முருகன் வீதி உலா
காலையும், மாலையும், அலங்கரிக்கப்பட்ட சிட்னி முருகன் தினமொரு வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து அடியார்களுக்கு அருள்பாலிப்பார். அத்தோடு, ஆஸ்திரேலியா வாழ் தமிழ் மக்கள் காவடி எடுத்தும் அங்கப்பிரதட்சனை செய்தும் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவர்.
கோவிலில் அன்னதானம்
ஆஸ்திரேலியா மட்டுமல்லாது பிற பகுதிகளில் இருந்து வரும் முருகன் அடியார்களுக்காக அன்னதானம், தண்ணீர்ப் பந்தல், போக்குவரத்து வசதிகள் யாவும் செய்யப்பட்டுள்ளன.
திருவிழாக் காலங்களில் ஆலயத்தில் மதிய நேரம் அன்னதானம் வழங்கப்படும். இரவு திருவிழாவின் போது பிரதேச வாரியான பக்தர்கள் இரவு நேர உணவை ஆலய உணவுச்சாலையில் தயாரித்து விற்பனை செய்வார்கள்.
ஆலயத்திருப்பணிக்கு நிதி
இதன் மூலம் திரட்டப்படும் நிதி, ஆலயத் திருப்பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இறை அடியார்கள் அனைவரும் திரண்டு வந்து சிட்னி முருகன் மஹோற்சவத்தைக் கண்டுகளித்து முருகனின் அருளாசிகளைப் பெற்று செல்லுமாறு சிட்னி முருகன் ஆலய சைவமன்றம் அழைப்பு விடுத்துள்ளது.
மேலதிக விபரங்களை www.sydneymurugan.org.au இணையத்தளம் ஊடாக அறிந்து கொள்ளலாம்.