மகளிர் தின “அவ்வையார் விருது”-டாக்டர் மாதங்கிக்கு வழங்கப்படுகிறது
சென்னை: டாக்டர் மாதங்கிக்கு அவ்வையார் விருது வழங்கி முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதைப்பற்றி தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
"ஒவ்வொரு ஆண்டும் சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மதநல்லிணக்கம், மொழித் தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாச்சாரம், பத்திரிகை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொண்டாற்றும் பெண்களை ஊக்குவிக்கும் வகையில் இந்தத் துறைகளில் சிறப்புடன் பணியாற்றும் பெண்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு சர்வதேச மகளிர் தினத்தன்று "அவ்வையார் விருது" எனும் உயரிய விருது வழங்கப்படும்.
இந்த விருது பெறுபவருக்கு ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், 8 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம், சான்றிதழ் மற்றும் சால்வை ஆகியவை வழங்கப்படும் என்றும் முதல் அமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி கடந்த இரண்டு ஆண்டுகளாக "அவ்வையார் விருது" மகளிர் தினத்தையொட்டி வழங்கப்பட்டு வருகிறது.
ஜெயலலிதா அவர்கள் 2014ஆம் ஆண்டிற்கான அவ்வையார் விருது வழங்கிட ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை மற்றும் தீப்புண் மருத்துவத் துறையில் சிறந்த சேவையாற்றி வரும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சைல்ட் டிரஸ்ட் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் டாக்டர்.கே. மாதங்கி ராமகிருஷ்ணனை தேர்ந்தெடுத்து அவருக்கு அவ்வையார் விருதுடன் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை, 8 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம், சான்றிதழ் மற்றும் சால்வையை வழங்கிட ஆணையிட்டுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.