ஊதி ஊதி தள்ளுகிற புண்ணியவான்களே.. இன்று உங்களுக்கான நாள்!!
சென்னை: உலகம் முழுவதும் ஆண்டுதோறும் மே 31 ஆம் தேதி சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் உலகம் முழுவதும் புகையிலை பயன்படுத்துவதற்கான பிரசார நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
கடந்த 1987 இல் உலக சுகாதார நிறுவனம் இன்றைய தினத்தை உலக புகை எதிர்ப்பு தினமாக அறிவித்தது. ஆண்டுதோறும் சுமார் 55 லட்சம் பேர் புகைப்பழக்கத்தால் இறந்து வருகிறார்கள். இவர்களுள் 10 லட்சம் பேர் இந்தியர்கள்.
முடிவாகும் புற்றுநோய்:
15 வயதிற்கு மேற்பட்ட ஆண்களில் 57% பேரும், பெண்களில் 10.8% பேரும் புகையிலையை ஏதோ ஒரு வடிவில் உபயோகிக்கின்றனர். புகையிலையினால் ஏற்படும் வாய்புற்று நோய் இந்தியாவில் லட்சத்திற்கு 10 பேரை பாதிக்கிறது.
புகையிலையால் மரணம்:
2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் 13% மரணங்களுக்கு புகையிலை பழக்கம் காரணமாக அமையும். உலகில் ஆண்கள் 47%, பெண்கள் 12% புகைப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார்கள்.
இளம்பெண்களும் அடிமை:
வளர்ந்த நாடுகளில் 42% ஆண்களும், 24% பெண்களும், வளரும் நாடுகளில் 48%, ஆண்களும் 7% பெண்களும் புகைபிடிக்கிறனர். இந்தியாவில் 53% ஆண்களும் 3% பெண்களும், அதிலும் குறிப்பாக வயது வந்த இளம்பெண்கள் புகைப்பழக்கத்திற்கு அடிமையாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொடியது புகையிலை:
எய்ட்ஸ் நோய் , காசநோய், வாகன விபத்துகள், தற்கொலைகள், கொலைகள் போன்றவற்றால் ஏற்படும் மரணத்தைவிட புகையிலையினால் ஏற்படுவது அதிகமாக இருக்கிறது.
குழந்தை பிறக்காது:
புகை பிடிப்பது மூலம் வாய், நுரையீரல், சிறுநீரகம், மார்பகம் ஆகியவற்றில் புற்றுநோய், ஆஸ்துமா, காசநோய், இதயநோய், உயர் ரத்த அழுத்தம், செவிட்டுத் தன்மை, மலட்டுதன்மை என பல நோய்கள் வருகின்றன.
அதிகரிக்கும் இதயநோய்:
தொடர் புகைப் பழக்கத்தால் நுரையீரல் புற்றுநோய் விரைவிலேயே வருகிறது. புற்று நோய், இதய நோய் ஆகியவற்றை புகைப்பழக்கம் 30 சதவீதம் அதிகரிக்கிறது என்று கண்டறியப்பட்டிருக்கிறது.
குறையும் வாழ்நாள்:
புகைப்பழக்கத்திற்கு உலகம் முழுவதும் 115 கோடிக்கும் மேலானவர்கள் அடிமையாகியுள்ளனர். உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் 15 வயதிற்கு மேற்பட்டவர்கள். இவர்கள்தான் அதிகமாக புகை பிடிக்கிறார்கள். தினம் ஒரு சிகரெட் பிடித்தால் ஒருவரின் வாழ்க்கையில் தினமும் 5 நிமிடங்கள் குறைகிறது.
உற்றோருக்கும் ஆபத்து:
புகை பிடிப்பதால் அல்லது பிறர் பிடிக்கும் சிகரெட், பீடி ஆகியவற்றின் புகையை நுகர்வதால் இருமல், சளி உருவாகி ஆஸ்துமா பிரச்சனை வருகிறது. ஆஸ்துமா இருப்பவர்கள் புகை பிடித்தால், அது ஆஸ்துமாவை மேலும் அதிகரித்து, மூச்சுத் திணறலை உருவாக்கி உயிருக்கே உலை வைக்கிறது.
ஆர்வக்கோளாறுகள்:
கர்ப்பிணி பெண்கள் புகைபிடித்தால் அது கர்ப்பத்தில் இருக்கும் சிசுவை பாதிக்கும், அது இறந்தே பிறக்கக்கூடும். ஆர்வக் கோளாரினால் புகைபிடிப்பவர்கள் இருக்கிறார்கள். பெற்றோர், உறவினர், நண்பர்கள், திரைப்பட நட்சத்திரங்கள் போன்றவர்களை பார்த்துப் புகை பிடிப்பவர்கள் அதிகம்.
விட்டாலும் விடுவதில்லை:
ஒருவர் புகை பழக்கத்தை நிறுத்தினால் இதய நோய், நுரையீரல் புற்றுநோய், நுரையீரல் நோய்கள், வலிப்பு நோய் போன்றவை படிப்படியாக குறையும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புகை பழக்கத்தைக் கைவிட்டு 10-15 ஆண்டுகள் கழித்து தான் மனிதன் முழு ஆரோக்கியம் பெறுகிறான். அது வரைக்கும் அதன் பாதிப்பு உடலுக்குள்ளே இருந்துக் கொண்டேதான் இருக்கும்
அன்பானவர்களை நினையுங்கள்:
மொத்ததில், ஒருவர் புகைபிடிப்பதால் அவருடைய அன்பிற்கு பாத்திரமானவர்களும் பாதிக்கப்படுகிறார்கள்.ஒவ்வொரு முறை புகைப்பிடிக்கும் முன்பும் உங்கள் நலனில் அக்கறை உள்ளவர்களை ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள்.புகைப்பிடிக்க வேண்டும் என்ற எண்ணமே உங்களைவிட்டுப் போய்விடும்.