”வாசிப்பதே சுவாசமும், நேசமும்” – ’உலக புத்தக தினம்’ இன்று
சென்னை: "நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன்" என்றார் ஆபிரகாம் லிங்கன்.
"போதும் என்று நொந்துபோய், புதுவாழ்வைத் தேடுகிறீர்களா... ஒரு புதிய புத்தகத்தை வாங்கி வாசிக்கத் தொடங்கு" என்றார் இங்கர்சால்.
அத்தகைய மிகச்சிறந்த விசயம் உலகில் இருக்கின்றது என்றால் அது புத்தகம் மட்டுதான்.
வாசிப்பே சுவாசம்:
வாசிப்பையும், நேசிப்பையும் கொண்டவர்கள்தான் சிறந்த மனிதர்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.அத்தகைய சிறப்பான "உலக புத்தக தினம்" இன்று கொண்டாடப்படுகின்றது.
விவசாயி மகன்:
லண்டனில் உள்ள ஸ்டராட் போர்டு என்னும் ஊரில் 1564 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் நாள் பிறந்தார் சேக்ஸ்பியர். ஏழை விவசாயத் தொழிலாளியின் மகனான இவர் ஆடு, மாடு மேய்த்தார். தாய் மூலமாக அறிவை வளர்த்துக் கொண்டார்.
வறுமையிலும் திறமை:
படிப்பில் ஆர்வம் இருந்தும், வறுமையின் காரணமாக பள்ளியிலிருந்து நிறுத்தப்பட்டார். எனினும், அறிவாற்றலை வளர்த்து, நாடகம், கவிதை எழுதியும், நாடகத்தில் நடித்தும் புகழ் பெற்றார்.
ராணியின் எண்ணம்:
ஒருமுறை, இவரது நாடகத்தைப் பார்க்க ராணி எலிசபெத் வந்தார். வேண்டுமென்றே தனது கையுறையை மேடையில் நழுவவிட்டார். சேக்ஸ்பியர் நடிப்பை நிறுத்திவிட்டு எடுத்துத் தருவார் என எதிர்பார்த்தார் ராணி.
ஏழை மாணிக்கம்:
சேக்ஸ்பியரோ சிறுதுகூடச் சலனமடைய வில்லை. கையுறையைக் குனிந்து எடுப்பதற்கு ஏற்றாற்போல், பேசிக் கொண்டிருந்த வசனத்தில் புதிய வரி சேர்த்துப் பேசி நடித்தார். அதுவும் நாடக வசனம் என்று பார்ப்போர் எண்ணும்படி நடித்து, கையுறையினை எடுத்து ராணியிடம் நீட்டியபடியே வசனம் பேசித் தொடர்ந்து நடித்தார். அது, திட்டமிட்டுத் தயாரித்த நடிப்பு போலவே இருந்ததாம்.
மனிதர்களைப் புரிந்தவர்:
தாம் வாழ்ந்த 52 வருடத்தில் 38 நாடகங்களையும், 154 வசன கவிதைகளையும் உலக இலக்கியத்திற்குக் கொடுத்துள்ளார். மனித மன உள்ளுணர்வுகளைப் பற்றி இவரைப் போல் எழுதியவர்கள் இல்லையென்றே சொல்ல வேண்டும்.
படிக்காத மேதை:
முறையான கல்வி கற்காமலேயே ஆங்கில மொழியினை இவர் கையாண்டுள்ள விதம் மொழிக்கே தனிப் பெருமையினையும் அந்தஸ்தினையும் ஏற்படுத்தியுள்ளது எனலாம்.
சேக்ஸ்பியர் நினைவு நாள்:
ஆங்கில இலக்கியம் உள்ள வரை இவரது படைப்புகளின் புகழ் நிலைத்து நிற்கும். 1616 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் நாள் இயற்கை எய்தினார். இவர் மறைந்த நாளான ஏப்ரல் 23 ஆம் தேதி உலக புத்தக தினமாகக் கொண்டாடப்படுகிறது.