உலகத் தமிழர்களின் பெருவிழா 'ஃபெட்னா' 2014.. அமெரிக்காவில் ஜூலை 3-ல் தொடங்குகிறது!
செயிண்ட் லூயிஸ்(யு.எஸ்): அரை மில்லியன் தமிழர்கள் வசிக்கும் அமெரிக்காவில் வருடந்தோறும் நடைபெற்றும் வரும் தமிழர் பெருவிழாவான 'பெட்னா தமிழ் விழா, இந்த ஆண்டு செயிண்ட் லூயிஸ் நகரில் ஜூலை 3 முதல் 6 வரை நடைபெறுகிறது. அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களை உள்ளடக்கிய வட அமெரிக்க தமிழ்ச் சங்க பேரவை(ஃபெட்னா) நடத்தும் இந்த விழாவில், தமிழகம் மற்றும் உலகெங்கும் உள்ள தமிழறிஞர்கள், பல்துறை கலைஞர்கள், சின்னத்திரை, பெரிய திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்கள்.
வரவேற்பு நிகழ்ச்சி
ஜூலை 3ம் தேதி மாலை இரவு உணவுடன் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. சாதனைத் தமிழர்கள் கவுரவிக்கப் படுகிறார்கள். பேரவையின் நன்கொடையாளர்களும், சிறப்பு அனுமதிச்சீட்டு பெற்றுள்ளவர்களும் இதில் கலந்து கொள்கிறார்கள்.
கலை நிகழ்ச்சிகள்
அம்மாபேட்டை கணேசன் வழங்கும் தோல்பாவைக் கூத்து நிகழ்ச்சி, அடுத்த அமெரிக்க தமிழர்களிடம், பழந்தமிழர்களின் தொன்மைக் கலையை புதுப்பிக்கும் முயற்சியாக கருதப்படுகிறது. டாக்டர் வேலு சரவணன், டாக்டர் ஜோ செரினியின் ஆகியோரின் சிறப்பு கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறுகிறது.
சிறப்பு அழைப்பாளர்கள்
டைம் 100 ல் இடம்பெற்ற முருகானந்தன், இதய நிபுணர் டாக்டர் வி.சொக்கலிங்கம், பேருர் மருதாசல அடிகளார், எழுத்தாளர் ஹரி கிருஷ்ணன், அமெரிக்க பல்கலைக் கழக திரைப்படத்துறை பேராசிரியர் டாக்டர் சுவர்ணவேல் ஈஸ்வரன், ஹாலிவுட்டின் தமிழ் இயக்குனர் சுவாமி கந்தன், சித்த மருத்துவர் முனைவர் செல்வ சண்முகம், வாழ்வியல் பயிற்சியாளர் வேலு ராமன், இயற்கை மருத்துவம் 'ஹீலர்' பாஸ்கர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கிறார்கள். தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்வதுடன், சார்ந்த துறையில் சக தமிழர்களின் முன்னேற்றத்திற்குரிய அம்சங்களையும் எடுத்துரைக்கிறார்கள்.
தீரன் சின்னமலை
நிழல் பொம்மலாட்டம் (Shadow puppet show), நடனப்போட்டிகள், தமிழ்த் தேனீ, தமிழிசை, கவியரங்கம், கருத்துக் களம் மற்றும் பேரவை வரலாற்றில் முதன் முறையாக குறும்பட போட்டி ஆகியவை சிறப்பு நிகழ்ச்சிகளாக இடம்பெறுகின்றன. அனைத்து உறுப்பினர் சங்கங்களும் அணிவகுக்கும் சங்கங்களின் சங்கமம், பன்முகத் திறன், இலக்கிய வினாடி வினா, வர்த்தகர்கள் நேரம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் உண்டு. கூடுதலாக தமிழ்ச் சங்கங்களின் சார்பில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. முத்தாய்ப்பாக 'தீரன் சின்னமலை' நாடகம் முதன் முறையாக அமெரிக்காவில் நடைபெற உள்ளது.
அமெரிக்கத் தமிழர்கள் சாதனை விருது
பேரவை வரலாற்றில் புதிய மைல் கல்லாக , அமெரிக்காவில் உள்ள சாதனைத் தமிழர்களை சிறப்பிக்கும் நிகழ்ச்சி இடம் பெற்றுள்ளது. இந்த ஆண்டு சாதனைத் தமிழர்களாக, டாக்டர் ஆரோக்கியசாமி பால்ராஜ், டாக்டர் ராஜ் செட்டி, டாக்டர்.கே.சுஜாதா, 'டெஸ்லா' ஜெய் விஜயன், அருண் சுப்ரமணியன், டாக்டர் சித்ரா துரை மற்றும் டாக்டர் அருண் மோகன் கவுரவிக்கப்படுகிறார்கள்.
அமெரிக்கத் தமிழ்த் திருவிழா
பேரவை விழாவில் கலந்து கொள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் கனடாவிலிருந்தும், விமானம், பேருந்து, கார் என அனைத்து வித போக்குவரத்து வாகனங்களிலும் வருகின்றனர். தமிழகத்தில் சொந்த ஊருக்கு போக முடியாதவர்கள் கூட பேரவை விழாவில் கலந்து கொண்டு, நான்கு நாட்கள் தமிழக உணர்வை சுவாசித்து வருகின்றனர். ஜூலை 3, புதன்கிழமை முதல், 6ம் தேதி ஞாயிற்றுக் கிழமை வரை செயிண்ட் லூயிஸ் நகரம் தமிழர் திருவிழாவால் திக்குமுக்காடப் போகிறது என்றால் ஆச்சரியமில்லை.
ஒன்இந்தியா
விழா தொடர்பான மேலதிக தகவல்களை http://www.fetna2014.com/ என்ற இணையப் பக்கத்தில் காணலாம்.
ஃபெட்னா நிகழ்ச்சிகளை நேரடியாக அமெரிக்காவிலிருந்து நமது ஒன்இந்தியா செய்தியாளர் தரவிருக்கிறார்.