ஐக்கிய நாடுகள் தினம்
பொதுச்சபை:
192 அங்கத்துவ நாடுகளையும் இது கொண்டிருக்கும். எல்லா அங்கத்துவ நாடுகளும் 5 பிரதிநிதிகளை பொதுச்சபைக்கு அனுப்பலாம். இருப்பினும் ஒருவர் மட்டுமே வாக்கிற்கு உரித்தானவர். பொதுச்சபை பொதுவாக வருடத்தில் ஒருமுறை கூடும். ஐக்கிய நாடுகள் சபையின் 64வது வருடாந்த அமர்வு 2009 அக்டோபரில் நியூயோர்க் நகரில் நடைபெற்ற போது சமாதானம் மற்றும் பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி, மனித உரிமை விருத்தி, மனிதாபிமான மற்றும் அனர்த்த நிவாரண விடயம், சர்வதேச சட்டங்கள் மற்றும் நீதி, போதைப்பொருள் தடுப்பு, ஆயுதக் களைவு, நிர்வாக விவகாரம், பயங்கரவாதத்தை ஒழித்தல் ஆகிய ஒன்பது விஷயங்கள் குறித்த விவாதங்கள் நடைபெற்றன.
ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் நியூயார்க்கில் அமைந்துள்ளது. சாசனத்தின் வரையறைகளுக்குட்பட்டு எந்தப் பிரச்சினைகளையும், எந்த அங்கத்துவ நாடும் விவாதிக்கலாம். முக்கிய நெருக்கடிப் பிரச்சினைகளைப் பற்றிய முடிவெடுக்க மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் அவசியம்.
இதன் பொறுப்புக்கள் 7 நிர்வாகக் குழுக்கள் மூலம் நிறைவேற்றப்படும் அவையாவன:
அரசியல் பாதுகாப்பு,
பொருளாதாரம், சமூகம்,
கலாசாரம்,
தர்மகர்த்தா,
நீதி, நிர்வாகம்,
சிறப்பு அரசியல் குழு
என்பனவாகும்.
பாதுகாப்புச் சபையின் சில உறுப்பினர்களையும், பொருளாதார சமூக சபையின் அனைத்து உறுப்பினர்களையும், பொதுச் செயலாளரையும் பொதுச் சபையே தேர்வு செய்யும்.
பாதுகாப்புச் சபை:
இதன் மொத்த அங்கத்தவர் எண்ணிக்கை 15. நிரந்தர அங்கத்துவ நாடுகள் 5, அவையாவன: சீனா, பிரான்ஸ், ரஸ்யா அமெரிக்கா, பிரித்தானியா. ஏனைய 10 நாடுகளையும் பொதுச்சபை 2 ஆண்டுகளுக்கொருமுறை தேர்வு செய்யும். பாதுகாப்புச் சபையின் அங்கத்தவர் எண்ணிக்கையை 17ஆக உயர்த்துவதற்கும் ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு நிரந்தர அங்கத்துவத்தை வழங்கவும் கொள்கையளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதுவரை இது நடைமுறைப் படுத்தப்படவில்லை. அதே நேரம் இந்தியாவும் நிரந்தர அங்கத்துவத்தைப் பெற முயன்று வருகிறது.
பாதுகாப்புச் சபையில் ஒரு தீர்மானத்தை எடுக்க 5 நிரந்தர அங்கத்துவ நாடுகளும் ஏனைய 4 நாடுகளும் வாக்களிக்க வேண்டும். 5 நிரந்தர அங்கத்துவ நாடுகளில் ஒரு நாடாவது பிரேரணையை நிராகரித்தால் நடைமுறைப்படுத்த முடியாது. இவ்விசேட அதிகாரம் 'வீட்டோ" எனப்படும். இந்த 'வீட்டோ" அதிகார முறை தற்போது பலதரப்பட்ட விமர்சனங்களுக்கு உற்பட்டு வருகின்றது. அதே நேரம் இந்த வீட்டோ அதிகாரம் ரஷ்யா, சீனாவிடம் இல்லாவிடின் மேலைத்தேய நாடுகளின் செல்வாக்கு மிகைத்து விட்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.
பாதுகாப்புச் சபையின் நோக்கங்களும், செயற்பாடுகளும்
ஐ.நாவின் நோக்கங்களுக்கும், கொள்கைகளுக்கும் ஏற்ப உலக சமாதானத்தையும், பாதுகாப்பையும் பேணல், சர்வதேச மோதல்களுக்கு வழிகோலும் அபிப்பிராய பேதங்கள் பற்றி ஆராய்தல், இத்தகைய மோதல்களைத் தீர்ப்பதற்கான வழிகளை அல்லது நிபந்தனைகளை முன்வைத்தல், ஆயுதக் குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளல், சமாதானத்திற்கெதிராக எழும் பிரச்சினைகள், ஆக்கிரமிப்புக்கள் பற்றி ஆராய்ந்து மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளை முன்வைத்தல்
இச்சந்தர்ப்பத்தில் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளல், ஆக்கிரமிப்பைத் தடுக்க பொருளாதாரத் தடை, ஒழுக்க நடவடிக்கையை எடுத்தல், இராணுவப் பலத்தைப் பிரயோகித்தல் போன்ற படிமுறைகள் மேற்கொள்ளப்படும். அண்மைக்காலத்தில் ஈராக் மீது அமெரிக்க நேசப்படைகள் தாக்குதல் மேற்கொண்டமை ஐ.நா. மீது அமெரிக்காவின் செல்வாக்கை நிரூபிக்கும் ஒரு நிகழ்வாகவே கருதப்படுகிறது.
பொருளாதார சமூக சபை:
அங்கத்துவ நாடுகள் 54யைக் கொண்டது. 18 நாடுகள் 3 ஆண்டுகள் காலத்துக்குப் பொதுச்சபையால் தெரிவு செய்யப்படும். ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அமைப்புக்களை ஒன்றிணைக்கும் அமைப்பே இது. இது வருடத்தில் இரு தடவைகள் கூடும் (ஏப்ரல் மாதத்தில் நியுயேர்க்கிலும், ஜூலை மாதத்தில் ஜெனிவாவிலும் கூடும்).
இந்நிறுவனத்தின் கடமைகள் துணைக் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு நிறைவேற்றப்படுகின்றன. போக்குவரத்து, செய்தித் தொடர்புகள் குழு, புள்ளி விபரக் குழு, ஜனத் தொகைக் குழு, சமூக வளர்ச்சிக் குழு, மனித உரிமைகள் பாதுகாப்புக் குழு, சிறுபான்மையினரின் பாதுகாப்புக் குழு, பெண்கள் நல பாதுகாப்புக் குழு மேலும் ஐரோப்பிய ஆசிய, லத்தீன் அமெரிக்கா நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கும் என தனித்தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கும்.
நம்பிக்கைப் பொறுப்புச்சபை:
சுதந்திரம் பெறாத நாடுகள் தாம் வளர்ச்சி பெறும்வரை வல்லரசுகளின் பொறுப்பில் இருக்கும். அவ்வாறு இருக்கும் நாடுகளால் (உறுப்பு) நிர்வாகிக்கப்படும் நாடுகளைக் கண்காணிக்க இது அமைக்கப்பட்டது. இச்சபையில் 12 உறுப்பினர்கள் இடம்பெறுவர் 3 ஆண்டுகளுக்கொருமுறை பொதுச்சபையால் இத்தெரிவு இடம்பெறும். இன்றைய காலகட்டத்தில் நம்பிக்கைப் பொறுப்புச்சபை முக்கியத்துவம் இழந்ததொரு சபையாகவே திகழ்கிறது.