காத்திருக்கவேண்டும் எல்லா பொம்மைகளும்!
ஒழுங்கற்ற வளைவுகளாலான
உன் சதுர நிலாவை
தாங்கி அழகாகிக் கொள்ளும்
வானம்
வெளிர் மஞ்சளை வானத்திற்கும்
மென் நீலத்தை தண் நிலவுக்கும்
அடித்துச் சிரிக்கிறாய்-உன்
கன்னக்குழியில் மறைகிறது
நீல நிலவு.....
ஒவ்வொரு பொம்மைகளுக்கும்
பெயர் வைத்தாயிற்று-டிரிக்சியும்
பூவும் உன் பிரியத்தினை எப்படி
புரிந்த்துகொள்ளுமோ....
பாட்டரிகள் காலியான பின்
உணர்வற்றுக்கிடக்கும்
பொம்மைகள் என் மனதை கசக்கும்
சிங்கம்,மான் மற்றும் கரடி பொம்மைகள்
கொலுப்படியிலிருந்து இறங்கி உன்
படுக்கையை ஆக்கிரமித்துக்கொள்ளும்
அடுத்த நாள் அழகாய் கொலுவேரும்
ஐபோனையும் கொலுவில் வைக்க
அடம்பிடிக்கிறாய்-காரணமாய்
காத்திருக்கிறது பூனைக்கூட்டமும்
இன்னும் சில பெயரறியா மிருகங்களும்
பூக்களையும் இலைகளையும்
பறித்து நீரூற்றி சமைத்து
ஊட்டிவிட்டு கவனமாய்
டிஷ்யூ எடுத்து துடைத்துவிட்டு
தூங்கவைக்கும் உன் அன்புக்கு
இனி அடுத்த சனி,ஞாயிற்றுக்கிழமைக்கு
காத்திருக்கவேண்டும் எல்லா பொம்மைகளும் சாப்பிடாமல்...
அவைகளுக்கு கொலு உடன்பாடில்லை... !