ஓ போடாதிங்க.. ஓட்டு போடுங்க..!

புதன்கிழமை, ஏப்ரல் 22, 2009, 11:35 [IST]
- சஞ்சய் காந்தி

தேர்தல் நெருங்கிவிட்டது. அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து விட்டார்கள். வேட்பு மனு தாக்கலும் தமிழகத்தில் தொடங்கிவிட்டது.

பெரும்பாலானவர்களுக்கு யாருக்கும் ஓட்டுப் போடுவதில் விருப்பம் இல்லை போலும். அதனால் 49ஓ படிவத்தை பயன்படுத்தப் போவதாக சொல்லி இருக்கிறார்கள். இது பல தவறான செயல்கள் தொடர்வதற்கும் நல்ல விஷயங்கள் நடக்காமலே போவதற்கும் தான் வழிவகுக்கும் என்பது என் அபிப்ராயம்.

49ஓ படிவம் பயன்படுத்த நினைப்பதற்கு காரணம், அரசியல் கட்சிகள் அறிவிக்கும் வேட்பாளர்களின் மேல் நம்பிக்கை இல்லாமல் தானே. ஆனால், இவர்களை தவிர்த்து எல்லாத் தொகுதியிலுமே பத்துக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் சுயேட்சையாக களத்தில் இருப்பார்கள்.

அவர்களில் நிச்சயம் ஒருவராவது நாம் எதிர்பார்க்கும் தகுதியுடன் இருப்பார். அதாவது, நன்கு படித்தவராகவும், அந்த பகுதியின் மக்கள் நலனிலும் வளர்ச்சியிலும் ஆர்வம் கொண்டவராகவும், எளிமையானவராகவும், எளிதில் சந்தித்து நமது தேவைகளை பூர்த்தி செய்ய கூடியவராகவும் இருப்பார். அவருக்கு உங்கள் வாக்கை பதிவு செய்யலாமே.

நீங்கள் ஒரு சுயேட்சைக்கு வாக்களிப்பதன் மூலம் அவருக்கு ஆதரவு அளிக்கிறீர்கள் என்று மட்டும் காட்டுவதில்லை, களத்தில் நிற்கும் முக்கிய அரசியல் கட்சிகளுக்கு எதிராகவும் உங்கள் வாக்கை பதிவு செய்திருக்கிறீர்கள் என காட்ட முடியும்.

அதன் மூலம் வரும்காலத்தில் அரசியல் கட்சிகளும் தற்போது அதிக ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளரைப் போன்ற தகுதியில் இருப்பவருக்கு வாய்ப்பளிக்க முன்வருவார்கள். இது மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

அது மட்டுமல்ல, அவ்வாறு செய்வதன் மூலம் மேலும் பல நல்லவர்கள், அதாவது நாம் எதிர்பார்ப்பது போன்ற தகுதி உள்ளவர்கள் அரசியலுக்கு வருவார்கள். அவர்கள் மூலம் இந்த தேசத்தின் தலை எழுத்தையே மாற்ற முடியும்.

அதை விட்டு 49ஓ படிவம் பயன்படுத்தி ஒட்டு மொத்தமாக வாக்களிப்பதை புறக்கணித்தால் நம் விருப்பம் என்ன என்பதை எப்படி உணர்த்த முடியும்? நாம் எது போன்ற வேட்பாளரை விரும்புகிறோம் என்பதை எப்படி வெளிப்படுத்த முடியும்?.

ஆகவே, உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு இருக்கும் எதாவது ஒரு வேட்பாளருக்கு வாக்களித்து உங்கள் ஜனநாயகக் கடமையை செய்யுங்கள். 49ஓ படிவம் பயன்படுத்துவதற்கு முன் நன்றாக யோசியுங்கள். முடிந்தால் தவிர்க்கப் பாருங்கள்.

IPL, Wankhede Stadium, Mumbai
Kolkata Knight Riders won by 32 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
Match starts at 03:30 pm IST  
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Match starts at 04:00 pm IST