மோடியை நம்பியிருக்கும் ஜப்பான் கம்பெனிகள்
சென்னை: மோடியின் வரவை பாகிஸ்தான், இலங்கை என்று ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு விதமாக கணக்கிடுகிறது. மற்ற நாடுகள் எப்படி கணக்கிட்டாலும் இந்தியா தற்போது கவனிக்க வேண்டியது ஜப்பான் நிறுவனங்கள் இந்தியா மீது காட்டும் ஆர்வம். பொதுவாக மூலதனம் மற்றும் ஏற்றுமதி வளர்ச்சிக்கு மேலை நாடுகளை தான் எதிர்பார்ப்போமே! ஏன் ஜப்பான் மீது இந்த ஆர்வம் என்று எண்ண தோன்றும்.
கடந்த சில ஆண்டுகளாக சீனா மற்றும் ஜப்பானிடையே அரசியல் உறவு மிகவும் நலிந்து வருகிறது. கிழக்கு சீன பகுதியில் உள்ள சில ஜப்பானிய தீவுகள் மீது சீனா உரிமை கொண்டாடுகிறது. கடந்த 2012ம் ஆண்டு சீனாவில் உள்ள ஜப்பானிய வணிக ஸ்தாபனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
ஜப்பானின் மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் தங்களது உற்பத்தி தொழில் நிறுவனங்களை மலிவான உற்பத்தி செலவுக்காக சீனாவில் வைத்திருந்தன. தற்போது சீனா - ஜப்பான் உறவு சீர்குலைந்து வருவதால் தங்களது தொழிற்சாலைகள் மற்றும் முதலீடுகளின் நிலை கேள்விக்குறியாகப் போக வாய்ப்புள்ளதால் மாற்று வழியை பற்றி யோசிக்க ஆரம்பித்துள்ளன. சீனாவுக்கு அடுத்தபடியாக scalability அதிகம் உள்ள நாடு இந்தியா தான்.
ஜப்பானிய நிறுவனங்கள் எளிமையான முதலீடு, முதலீட்டிற்கு பாதுகாப்பு, எளிமையான தொழிலாளர் சட்டங்கள் (???),முதலீட்டுக்கான ஊக்கத்தொகை, எல்லாவற்றிற்கும் மேலாக அடிப்படை கட்டுமான வளர்ச்சி போன்றவற்றை மோடியிடமிருந்து எதிர்பார்க்கிறது.
மேற்கூறிய எந்த மாற்றத்தை மோடி ஏற்படுத்த தொடங்கினாலும் உற்பத்தி தொழிற்துறையில் ஜப்பானிய தொழில் நிறுவனக்களின் முதலீட்டை அதிகளவு எதிர்பார்க்கலாம்.