Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

உண்மையிலேயே இது 'வெள்ளை' அறிக்கை தான் பிரணாப்ஜி!

Posted by:
Published: Thursday, May 24, 2012, 16:32 [IST]

White Paper On Black Money Draws Blank

-ஏ.கே.கான்

கருப்புப் பணம் குறித்து இரு தினங்களுக்கு முன் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 97 பக்க வெள்ளை அறிக்கை உண்மையிலேயே 'வெள்ளை அறிக்கை' தான். அந்தத் தாள்களில் எதிர்பார்க்கப்பட்ட விவரங்கள் ஏதும் இல்லை. இதனால் அவை கிட்டத்தட்ட வெற்றுத் தாள்கள் தான்.

இந்த அறிக்கையில் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தில் அளவு குறித்த தகவல் இல்லை, வெளிநாடுகளில் சட்ட விரோதமாக முதலீடு செய்து வாங்கப்பட்டுள்ள இந்தியர்களின் சொத்துக்கள் குறித்த விவரம் இல்லை, வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு செய்துள்ள இந்தியர்களின் பெயர் விவரம் இல்லை, தேர்தல் சமயத்தில் நாடு முழுவதும் புழங்கும் கருப்புப் பணம் குறித்தோ அது எங்கிருந்து திடீரென வெளியே வருகிறது என்பது குறித்தோ ஏதும் தகவல் இல்லை.

ஆனால், கருப்புப் பணத்தை ஒழிக்க மத்தியில் லோக்பால் அமைப்பையும் மாநிலங்களில் லோக் ஆயுக்தவையும் நியமிக்கலாம், கறுப்புப் பணக்காரர்களை விசாரித்து தண்டிக்க விரைவு நீதிமன்றங்களை நிறுவலாம், கிரெடிட்- டெபிட் கார்டுகள் மூலம் பொருள்களை வாங்குவதை ஊக்குவிக்கலாம் என்பது உள்பட பல யோசனைகளை மட்டுமே வெள்ளை அறிக்கை பரிந்துரைத்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை மீட்போம் என்ற கோஷத்தை அரசியல் கட்சிகள் போட ஆரம்பித்ததில் இருந்து, வெளிநாடுகளில் இருந்த பணத்தை பெரும்பாலான பண முதலைகள் திரும்ப நாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாகத் தெரிகிறது. இந்த விவரம் வெள்ளை அறிக்கையில் உள்ள ஒரு பாரா மூலம் தெரிய வருகிறது.

2006ம் ஆண்டில் ஸ்விஸ் நாட்டு வங்கிகளில் இருந்ததாகக் கருதப்படும் ரூ. 23,273 கோடி இந்தியர்களின் கருப்புப் பணம் இப்போது ரூ. 9,295 கோடியாகக் குறைந்துவிட்டது. இந்தத் தகவலை ஸ்விஸ் தேசிய வங்கி தெரிவித்துள்ளதாக வெள்ளை அறிக்கையில் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

அப்படியானால், அந்தப் பணம் எங்கே போனது?. அது இந்தியாவுக்குள் மீண்டும் நுழைந்துள்ளது.

குறிப்பாக பங்குச் சந்தைகளுக்குள் இந்தப் பணம் நுழைந்திருக்கலாம் என்று தெரிகிறது. அன்னிய நேரடி முதலீடுகள் என்ற (Foreign direct investments) பெயரிலும், Global depository receipt எனப்படும் சர்வதேச முதலீட்டு திட்டங்கள் பெயரில் வங்கிகள் வழியாகவும் இந்தப் பணம் இந்திய பங்குச் சந்தைகளுக்குள் ஊடுருவி இருக்கலாம்.

மேலும் இந்திய ரியல் எஸ்டேட் துறையிலும், இந்திய தங்க மார்க்கெட்டுக்குள்ளும் இந்தக் கருப்புப் பணம் நுழைந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

நாடெங்கும் திடீரென பல்கிப் பெருகி வரும் பெரிய பெரிய தங்க நகைக் கடைகள், தங்க முதலீட்டுத் திட்டங்கள், தங்கத்தின் மீது பெரும் கடன் தரும் திடீர் நிதி நிறுவனங்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்று யோசித்துப் பாருங்களேன்.

அதே போல இந்திய ரியல் எஸ்டேட் துறையில் நடமாடும் கருப்புப் பணம் உலகறிந்த ஒன்றே.

ஆனால், இதில் கருப்பு ஆடுகளை வெளியே கொண்டு வராமல், கருப்புப் பணத்தை கட்டுப்படுத்தப் போவதாகவும், இதற்காக 4 அம்ச உத்திகளையும் அறிவித்துள்ளார் பிரணாப் முகர்ஜி.

இந்த வெள்ளை அறிக்கையில் கருப்புப் பணத்தை கட்டுப்படுத்தும் தீர்க்கமான திட்டங்கள் ஏதும் இல்லை. பேசாமல் இதை கருப்பு அறிக்கை என்றே பிரணாப் முகர்ஜி கூறியிருக்கலாம்.

English summary
The much-awaited White Paper on black money presented in the Lok Sabha by Union finance minister Pranab Mukherjee did not disclose the amount of unaccounted money stashed by Indians abroad and cited a Swiss National Bank claim from 2010 stating that Rs9,295 crore of unaccounted money was deposited in foreign banks.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
2nd Test , Headingley, Leeds
England: 337 / 7, 94 Overs