ஆஸ்திரேலியா தனித்திருக்கவில்லை...
இதுவரையிலான கணிப்புகளின்படி ஆஸ்திரேலியாவில் 45,000 ஆண்டுகளுக்கு முன் முதல் மனித இனம் காலடி எடுத்து வைத்தது. அதன் பிறகு ஆஸ்திரேலியாவுக்குள் 18ம் நூற்றாண்டில் தான் ஐரோப்பியர்கள் நுழைந்தனர். இடைப்பட்ட காலத்தில் ஆஸ்திரேலியா தனித்திருந்தது.. எந்த இனக் கலப்பும் நடக்கவில்லை, அங்கே வேறு யாருமே நுழையவில்லை என்று நம்பப்பட்டு வந்தது.
நம்பிக்கையை உடைத்த ஜீன்கள்..
ஆனால், இது தவறு என்பதை ஆஸ்திரேலிய பழங்குடியினர் (aboriginal Australians) இடையே நடத்தப்பட்ட ஜீனோம் ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்தியுள்ளன. இந்த இனத்தினரின் ஜீன்களில் 11 சதவீதம் இந்தியாவின் ஆதிவாசி இனத்தினரின் அடையாளங்கள் உள்ளன. இந்த ஜீன் கலப்பு 4,000 ஆண்டுகளுக்கு முன் நடந்திருப்பதும் தெரிகிறது. இங்கு குடியேறிய இந்திய பழங்குடியினர் தான் ஆஸ்திரேலிய பழங்குடியினருக்கு கருவிகள் செய்யும் தொழில்நுட்பத்தையும் சொல்லித் தந்துள்ளனர் என்கின்றர் ஆராய்ச்சியாளர்கள்.
ஜெர்மன் குழு நடத்திய ஆராய்ச்சி:
ஜெர்மனியின் லெய்ப்சிக் நகரில் உள்ள மேக் பிளாங்க் ஆய்வு மையத்தின் Evolutionary Anthropology (மானிட பரிணாமவியல்) பிரிவின் மரபியல் (geneticist) வல்லுனரான மார்க் ஸ்டோன்கிங் தலைமையிலான குழு தான் இந்த ஆராய்ச்சிகளை நடத்தியுள்ளது. உலகம் முழுவதும் உள்ள பழங்குடியினரின் ஜீன்களை ஆய்வு செய்து, அவைகளில் ஏற்பட்ட கலப்புகள், மாற்றங்கள், இடம் பெயர்வுகளை மிக விரிவான அளவில், உலகம் முழுவதும் பயணித்து ஆய்வு நடத்தி வருகிறார் மார்க்.
இந்தியாவிலிருந்து போன டிங்கோ நாய்கள்:
அதே போல இந்த பழங்குடியினர் தான இந்திய நாய்களை ஆஸ்திரேலியாவில் அறிமுகப்படுத்தியதாகவும் தெரிகிறது. இந்த நாய்களின் ஜீன்களில் நடந்த ஆராய்ச்சிகளில் இது உறுதியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவின் காட்டு நாய்களான 'டிங்கோ', இந்தியாவில் இருந்து தான் வந்தன என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.