ஆஸ்கர் விருதுக்கு மோதும் 3 உண்மைக் கதைகள்!
-ஏ.கே.கான்
இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் போட்டியில் உண்மைக் கதைகளை அடிப்படையாகக் கொண்ட 3 படங்கள் மோதுகின்றன.
முதலாவதாக ஸ்டீவன் ஸ்பீல்பர்கின் 'லிங்கன்'. அடுத்தது ஹாலிவுட் நடிகர் பென் அப்லெக் இயக்கிய 'அர்கோ'. மூன்றாவது 'ஜீரோ டார்க் தர்ட்டி'.
இவை தவிர லைப் ஆப் பை, லெஸ் மிஸரெபில், சில்வர் லைனிங்ஸ் பிளேபுக், ஜீரோ டார்க் தர்ட்டி, ஜேங்கோ அன்செயின்ட் உள்ளிட்ட சில படங்களும் போட்டியில் உள்ளன.
இதில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பவை 'லிங்கன்', 'அர்கோ', 'ஜீரோ டார்க் தர்ட்டி' ஆகியவை தான்.
காரணம் இந்த மூன்றின் கதைகளும் உண்மையில் நடந்த சம்பவங்களின் வரலாற்றுப் பதிவுகள்.
ஸ்பீல்பர்க்குக்கு இணையான ஒரு இயக்குனர் யார்?:
அதிலும், வரலாறை பதிவு செய்வதில் ஸ்பீல்பர்க்குக்கு இணையான ஒரு இயக்குனர் இப்போதைக்கு உலகிலேயே யாரும் இல்லை என்றே சொல்லலாம். அதற்கு அவர் இயக்கிய அமிஸ்டாட், ஷின்ட்லர்ஸ் லிஸ்ட், சேவிங் பிரைவேட் ரயான் ஆகிய படங்களே சாட்சி.
அமிஸ்டாட்.. கப்பலில் நடந்த புரட்சி:
ஆப்பிரிக்காவில் இருந்து 1839ம் ஆண்டில் அமெரிக்காவுக்குக் கொண்டு வரப்பட்ட கொத்தடிமைகள் வரும் வழியில் கப்பலிலேயே புரட்சியில் இறங்குவதும், இதைத் தொடர்ந்து நடந்த அமெரிக்க அரசியல்- சட்டப் போராட்டமும், இறுதியில் கொத்தடிமைகள் வெல்வதும் தான் கதை. இவர்கள் கொண்டு வரப்பட்ட ல அமிஸ்டாட் என்ற கப்பலின் பெயரையே படத்துக்கு பெயராக வைத்திருந்தார் ஸ்பீல்பர்க். இந்தப் படம் ஆஸ்கர் விருதில் 4 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டது.
ஹிட்லரிடமிருந்து உயிர்களை மீட்ட ஷின்ட்லர்:
அதே போல ஹிட்லரிடமிருந்து போலந்து நாட்டைச் சேர்ந்த யூதர்கள், சிறுவர், சிறுமியரை மீட்ட ஜெர்மனியைச் சேர்ந்த மனிதாபிமானம் மிக்க தொழிலதிபர் ஆஸ்கர் ஷின்ட்லர் குறித்த படம் தான் ஷின்ட்லர்ஸ் லிஸ்ட். இந்தப் படத்தை கருப்பு வெள்ளையிலேயே எடுத்திருந்தார் ஸ்பீல்பர்க். இந்தப் படம் 7 ஆஸ்கர் விருதுகளை வென்றது.
4வது மகனையாவது காப்பாற்ற நடந்த முயற்சி:
சேவிங் பிரைவேட் ரயான் படம் இரண்டாம் உலகப் போர் குறித்தது. இதில் தனது 4 மகன்களை போருக்கு அனுப்பி அவர்களில் 3 பேர் பலியாகிவிட, நான்காவது மகனை போர்க் களத்திலிருந்து மீட்டு வந்து தாயிடம் ஒப்படைக் கிளம்பும் ஒரு படைப் பிரிவின் கதை. இந்தப் படம் 6 ஆஸ்கர் விருதுகளை வென்றது.
இந்தப் படங்களின் இறுதிக் காட்சிகளில் படம் பார்ப்பவர்களையெல்லாம் கண் கலங்க வைத்தவர் ஸ்பீல்பர்க்.
லிங்கன் பட்ட பாடு:
இவரது இயக்கத்தில் இப்போது வெளியாகியுள்ள 'லிங்கன்' படம் அமெரிக்காவில் நடந்த உரிமைப் போரை அடிப்படையாகக் கொண்டது. கருப்பு இனத்தினருக்கு விடுதலையும், சம உரிமையும் அளிக்கவும், கொத்தடிமைத்தனத்தை ஒழிக்கவும் அதிபராக இருந்த ஆப்ரஹாம் லிங்கன் எடுத்த நடவடிக்கைகள், இதைத் தடுக்க அந் நாட்டு நாடாளுமன்றத்தில் அரங்கேறிய நாடகங்கள், கடைசியில் சம உரிமை தந்ததற்காக லிங்கன் சுட்டுக் கொல்லப்படும் வரையிலான சம்பவங்களை வலியுடன் நினைவுகூறும் படம் இது.
இந்தப் படம் ஆஸ்கர் விருதை வெல்ல வேண்டும் என்று அமெரிக்காவில் கடந்த வாரம் ராய்ட்டர்ஸ் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் பெரும்பாலான மக்கள் வாக்களித்திருக்கிறார்கள்.
அனில் அம்பானி கனெக்ஷன்:
இந்தப் படத்தை அமெரிக்காவின் ட்ரீம்வோர்க்ஸ் ஸ்டுடியோ, டுவன்டியத் சென்சுரி பாக்ஸ் ஆகிய நிறுவனங்களோடு சேர்ந்து தயாரித்திருப்பது அனில் அம்பானியின் ரிலையன்ஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனமாகும். ட்ரீம்வோர்க்ஸ் ஸ்டுடியோவில் அனில் அம்பானிக்கு 51 சதவீத பங்குகள் உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் ஸ்பீல்பர்கும் இதில் கண்சமான பங்குகளை வைத்துள்ளார்.
ஈரான் Vs அமெரிக்கா.. ஒரு உளவாளியின் திட்டம்:
அடுத்து ஆஸ்கர் போட்டியில் பலரையும் ஈர்த்துள்ள படம் 'அர்கோ'. 1979ம் ஆண்டு ஈரானில் நடந்த மக்களின் புரட்சியில் அநாவசியமாகத் தலையிட்ட அமெரிக்காவுக்கு பாடம் புகட்ட தெஹ்ரானில் இருந்த அமெரிக்க தூதரகத்தை புரட்சியாளர்கள் முற்றுகையிட்டு அங்கிருந்தவர்களை சிறை பிடித்தனர். இதில் 6 பேர் மட்டும் தப்பி அருகே இருந்த கனடா நாட்டுத் தூதரகத்துக்குள் அடைக்கலம் புகுந்தனர். அவர்களை கனடா நாட்டவர்களாகவே காட்டி, போலி கனடா பாஸ்போர்ட் தந்து மீட்டு வந்தார் ஒரு சிஐஏ உளவாளி.
கடைசி நேரத்தில் புரட்சியாளர்கள் உண்மையைக் கண்டுபிடித்துவிட, அவர்களது கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு இந்த 6 பேரும் எப்படி தப்பி வெளியே வந்தனர் என்பதே கதை. இதுவும் உண்மைக் கதை தான். இந்தப் படம் அமெரிக்காவின் பல்வேறு விருதுகளை வென்றுள்ளது. ஆஸ்கர் போட்டியிலும் உள்ளது.
பின்லேடன் வேட்டை:
இன்னொன்று சமீபத்திய நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு வெளியாகியுள்ள உண்மைக் கதை படம் தான் 'ஜீரோ டார்க் தர்ட்டி'. அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனைப் பிடிக்க அமெரிக்கா நடத்திய மாபெரும் தேடுதல் வேட்டைகள், பின்னணியில் நடந்த ரகசிய நடவடிக்கைகள், உண்மை சம்பவங்கள், பாகிஸ்தானின் அபோடாபாத் நகரில் வைத்து காலி செய்த அமெரிக்க சீல் படையினரின் தாக்குதல் அனைத்தையும் கலந்து தந்திருக்கிறார் பெண் இயக்குனரான கேத்ரீன் பிகலோ.
உண்மைகளை வாங்க பிடிபட்டவர்களிடம் சிஐஏ நடத்தும் விசாரணை டெக்னிக்குகள், மனிதாபிமானமற்ற நடவடிக்கைகள், கொடுமைகளையும் இந்தப் படத்தில் விளக்கியுள்ளார் கேத்ரீன். இதனால் அவருக்கு அமெரிக்க அரசின் கண்டனமும் பரிசாகக் கிடைத்துள்ள நிலையில் ஆஸ்கருக்குப் போட்டியிடுகிறது இந்தப் படம்.