சிங்கம் தாக்கி ஏகப்பட்ட ஸ்கார்ப்பியோக்கள் படுகாயம்!
-ஏ.கே.கான்
மகிந்த்ரா அண்ட் மகிந்த்ரா நிறுவனத்தின் அதிபர் ஆனந்த் மகிந்த்ரா சிங்கம்-2 படத்தைப் பார்த்தால் டென்ஷனாகிவிடுவார்.
அந்த அளவுக்கு படத்தில் பல இடங்களில் சூர்யாவிடம் 'ஒன்றரை டன்' அடி வாங்கிக் கொண்டே இருக்கின்றன ஸ்கார்பியோ கார்கள்.
முதல் சிங்கம் முழுக்க முழுக்க தூத்துக்குடி, சென்னையிலேயே சுற்றி வந்தது. இந்த இரண்டாவது சிங்கம் தூத்துக்குடியிலேயே பெரும்பாலான நேரத்தை செலவழித்துவிட்டு, இதுக்கு மேலே தூத்துக்குடியில் வச்சு கதையை நகர்த்த முடியாது என்பதால் கடல் தாண்டி தென் ஆப்பிரிக்கா வரை போகிறது.
படத்தின் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை பரபரபர.. என காட்சிகள் படு வேகத்தில் ஓடுகின்றன. இடையிடையே மானே, தேனே போட்டுக்கோ என்பது மாதிரி, கருப்பு கலர், வெள்ளை கலர் ஸ்கார்பியோக்களை போட்டு உடைத்துவிட்டு போய்க் கொண்டே இருக்கிறார் சூர்யா.
ஹன்சிகாவை ஸ்கூல் படிக்கிற புள்ளையாக பார்க்க நமக்கு ரொம்ப வெக்கமாய் இருக்கிறது.
இந்த ரஹ்மான் பேசாமல் மலையாளத்திலேயே சம்ஷாரிச்சு இருக்கலாம். தமிழில் ஹீரோவாக பல படங்களில் நடித்தவர், தமிழை சரியாகப் பேச கொஞ்சம் கூட மெனக்கடவில்லை. 'பாய்' கேரக்டரில் வரும் முகேஷ் ரிஷி, பேசியது சொந்தக் குரலோ.. ஓசியோ.. பொறுத்தமாக இருக்கிறது வாய்ஸ். தூத்துக்குடி தங்கராஜாக வரும் ரஹ்மானோ 'ஞான் ரவுடியாக்கும்' என்று காட்டிக் கொள்ள ரொம்பவே கஷ்டப்பட்டிருக்கிறார்.
'பாய்' கேரக்டரை கடத்தல் தாதாவாகக் காட்டிவிட்டதால், அதை பேலன்ஸ் செய்ய (விஸ்வரூபம் சிக்கல் எபெக்ட்) மன்சூர் அலிகானை எஸ்.ஐ. கரீம் பாய் ஆக்கிவிட்டார்கள். அவரும் உப்பிப் போன உடம்போடு உப்புசப்பில்லாத கேரக்டராக வந்து போகிறார்.
பேண்ட்டை கழற்றிவிடும் கேரக்டரில் சந்தானமும் அதே பழைய எஸ்.ஐ. எரிமலையாக விவேக்கும் வந்தாலும், மனதில் கொஞ்சமாவது நிற்பது சந்தானமே.. சந்தானமே..
அனுஷ்காவுக்கு ரொம்ப நல்ல பொண்ணு வேடம், சரியாகவே நடித்திருக்கிறார்.
கதையை முழுக்க முழுக்க தனது தோளிலேயே சுமந்து (சுமார் ஒன்றரை டன் வரை இருக்கும் என்கிறார்கள்) தனி ஆளாக படத்தை நகர்த்தியிருக்கிறார் சூர்யா. என்சிசி மாஸ்டராக, டிஎஸ்பியாக சூர்யாவின் முறைப்பும், முறுக்கும் சூப்பர்.
அதிகம் பேசாத கேரக்டரில் ராதாரவி, பேசாமல் இருந்திருக்க வேண்டிய கேரக்டரில் நாஸரின் மனைவியாக வரும் (அனுஷ்காவின் அம்மா) ஹார்லிக்ஸ் ஆண்டி ஜானகி, தூத்துக்குடிக்கு மட்டுமே நியமிக்கப்பட்ட உள்துறை அமைச்சர் மாதிரி விஜய்குமார், ஆப்பிரிக்க வில்லனாக டேணி சபானி, கடத்தல் கும்பலுக்கு சரியான அடியாளாக (சகாயம்) ராஜேந்திரன், சும்மாகாச்சுக்கும் வந்து போகும் தலைவாசல் விஜய், மனோரமா உள்பட படத்தில் ஏகப்பட்ட நடிகர் பட்டாளம்.
இவர்களோடு ஏகப்பட்ட ஸ்கார்பியோக்கள்!
ஆனால், படம் என்னவோ நல்லாத்தான் இருக்கு..
'இந்தியப் பெருங்கடலுக்கு ராஜா' இந்தியா தாண்டா! என்று சீனாவுக்கு 'பஞ்ச்' டயலாக் வைத்து படம் முடிகிறது.
இரண்டரை மணி நேரம் போனதே தெரியாத அளவுக்கு சூர்யா-ஹரி கூட்டணியின் சிங்க கர்ஜனை!.
'தூத்துக்குடி தங்கராஜ்' ரஹ்மான் பாஷையில் சொன்னால், 'இ படம் அடிபொழி'!! (இந்தப் படம் சூப்பர்)
ஆனால், சூர்யாவை சந்திக்கப் போனால் நான் ஸ்கார்பியோவில் போக மாட்டேன்!