பாலஸ்தீனத்துக்கு எதிராக 'பரம எதிரி' இஸ்ரேலுடன் கைகோர்த்த செளதி அரேபியா- எகிப்து!!!
-ஏ.கே.கான்
பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் நினைத்தபோதெல்லாம் ஏவுகணையை வீசுவதும், போர் விமானத் தாக்குதல் நடத்துவதும், அப்பாவிகள், குழந்தைகளை கண்மூடித்தனமாக கொன்று குவிப்பதும் ஒருபுறம் நடக்க, இதை தட்டிக் கேட்க வேண்டிய அமெரிக்கா செல்லமாக இஸ்ரேலை கண்டிப்பதும், அதே நேரத்தில் இந்த விவகாரத்தில் வேகம் காட்ட வேண்டிய செளதி அரேபியா, எகிப்து ஆகிய நாடுகள் மறைமுகமாக இஸ்ரேலுடனே கைகோர்த்து நின்றிருப்பதும் தான் இன்றைய நிதர்சனமான நிலை..
என்னாது இஸ்ரேலுடன் செளதி மறைமுக கைகோர்ப்பா என்ற கேள்வி எழலாம்.. இதற்கான காரணங்களைப் பார்க்கும் முன் இஸ்ரேல்- பாலஸ்தீனத்தின் வரலாற்றை ஒரு முறை திரும்பிப் பார்ப்பது உதவியாக இருக்கும்....
இரண்டாம் உலகப் போர்...
இரண்டாம் உலகப் போரில் லட்சக்கணக்கான யூதர்களை ஹிட்லர் கொன்று குவித்த பின்னர் தான் யூதர்களுக்கு என ஒரு தேசத்தை உருவாக்குவதே அவர்களுக்குப் பாதுகாப்பு என்ற முடிவுக்கு வந்தன அமெரிக்காவும் இங்கிலாந்தும். இதையடுத்து உருவாக்கப்பட்டது தான் இஸ்ரேல் தேசம்.
அதற்கு முன் பண்டைய காலத்தில் ஜெரூசலேமை மையமாகக் கொண்டு யூத இனம் வாழ்ந்தது. சிறிய அளவிலான அரசாட்சியையும் அமைத்தனர். ஆனால், அடுத்தடுத்து வந்த பாபிலோனிய, பாரசீக, கிரேக்க, ரோமானிய, அரபு அரசுகளின் ஆட்சியில் சிறிதும் பெரிதுமாய் யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேறிவிட்டனர். இதனால் யூதர்களின் எண்ணிக்கை அங்கே மிகவும் குறைந்துபோனது.
மறு குடியேற்றம்...
ஆனால், பிற நாடுகளில் குடியேறிய யூதர்களை பல்வேறு காரணங்களால் அந்த நாடுகளின் அரசுகள் ஒதுக்கவும் அடக்கவும் செய்தன. 1290ல் இங்கிலாந்தும், 1306ல் பிரான்சும் யூதர்களை நாட்டை விட்டு விரட்டின. பொதுக் கிணறுகளில் விஷம் கலந்ததாக எழுந்த பிரச்சனையையடுத்து ஸ்பெயின் நாட்டில் ஆயிரக்கணக்கான யூதர்கள் கொல்லப்பட்டனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். அதே போல போர்சுகல் நாடும் இவர்களை வெளியேற்றியது. இவர்களில் பலரும் இஸ்ரேல் என இப்போது அழைக்கப்படும் பாலஸ்தீன பகுதிகளில் குடியேற ஆரம்பித்தனர்.
Moses Hess என்பவர் மீண்டும் இஸ்ரேலிய தேசத்தை உருவாக்குவோம் என்ற கொள்கையை முன் வைக்க, பாலஸ்தீனத்தில் யூதர்கள் குடியேறுவது அதிகமானது.
யூத தேசம்...
இந் நிலையில் ஆஸ்திரியாவில் தியோடர் ஹெர்ட்ஸ் தலைமையில் ஸியோனிய இயக்கம் எனப்படும் யூதர் இயக்கம் தொடங்கப்பட்டது. அது தான் யூதர் நாடு கோரிக்கையை வலுப்படுத்தியது.
1914 முதல் 1918ம் ஆண்டு வரை நடந்த முதலாம் உலகப் போரில் ஐரோப்பிய யூதர்கள் ஜெர்மனியை யூதர்கள் ஆதரித்தனர். காரணம், ஜெர்மனியின் ரஷ்ய எதிர்ப்பு.
ரஷ்யாவில் கொல்லப்பட்ட யூதர்கள்...
போர் முடிந்த பின் ரஷ்யாவிலும் உக்ரைனிலும் யூதர்கள் பலி வாங்கப்பட்டனர். 1920களில் ரஷ்யாவில் புரட்சி ஏற்பட்டு கம்யூனிஸம் தலைதூக்கியபோது 1 லட்சம் யூதர்கள் கொலை செய்யப்பட சுமார் 40,000 யூதர்கள் தப்பி பாலஸ்தீனத்துக்கு வந்தனர். அதே போல போலந்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான யூதர்கள் பாலஸ்தீனத்துக்கு தப்பி வந்தனர்.
பாலஸ்தீனத்திற்குள்..
1922ம் ஆண்டில் இஸ்ரேலியர்களுக்கு புதிய நாட்டை உருவாக்கும் முயற்சிகள் ஆரம்பித்தன. இஸ்ரேலுக்கு Jewish Agency for Palestine என்ற அங்கீகாரத்தை இங்கிலாந்து வழங்க, இதை அரபு நாடுகளும் பாலஸ்தீனமும் கடுமையாக எதிர்த்தன. ஆனாலும் போலந்து, ஹங்கேரியில் இருந்து இஸ்ரேலுக்குள் சுமார் 80,000 யூதர்களை கொண்டு வந்து இறக்கியது இங்கிலாந்து. 1939ம் ஆண்டு வரை சுமார் 5 லட்சம் யூதர்கள் பாலஸ்தீனத்துக்குள் கொண்டு வந்து இறக்கப்பட்டனர்.
பாலஸ்தீனத்தை பிரித்து இஸ்ரேல்...
இந் நிலையில் இரண்டாம் உலகப் போர் முடிந்தவுடன் பாலஸ்தீனத்தைப் பிரித்து இஸ்ரேல் என்ற தேசத்தை உருவாக்குவது என ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு அரபு நாடுகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.
இதையடுத்து பாலஸ்தீனியர்களுக்கும் யூதர்களுக்கும் இடையே உள்நாட்டுக் கலவரம் வெடிக்க, யூதர்களுக்கு அமெரிக்கா உதவியது. 1948ம் ஆண்டு மே 14ம் தேதி பாலஸ்தீனத்தை இங்கிலாந்து விடுதலை செய்ய, அன்றைய தினமே இஸ்ரேல் தேசம் என்ற தனி நாடு உருவாகிவிட்டதாக அறிவித்தது யூக மக்கள் கவுன்சில்.
இஸ்ரேலுடன் போர்
இதை எதிர்த்து எகிப்து, சிரியா, ஜோர்டன், இராக் ஆகிய நாடுகள் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக படையை அனுப்பின. இஸ்ரேலுக்கு அமெரிக்கா உதவிகள் செய்ய, இஸ்ரேலுக்கு என ஐ.நா. ஒதுக்கிய பகுதிகள் தவிர பாலஸ்தீனியர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளிலும் 60 சதவீதத்தை இஸ்ரேல் கைப்பற்றியது.
சுமார் 7 லட்சம் பாலஸ்தீனியர்களை அவர்கள் வசித்த இடங்களில் இருந்து இஸ்ரேல் விரட்டியடித்தது. அன்று ஆரம்பித்தது பாலஸ்தீன விடுதலைப் போரட்டம்.
சொந்த நாட்டிலேயே ஒடுக்கப்பட்ட பாலஸ்தீனர்கள்
பாலஸ்தீனமாக இருந்த ஒரு நாட்டுக்குள் இஸ்ரேல் என்ற தனி நாடு உருவானதோடு, பாலஸ்தீனத்தின் பல பகுதிகளையும் கைப்பற்றி இன்று இஸ்ரேல் என்ற நாட்டுக்குள் இரு பகுதிகளில் மட்டுமே (காஸா, வெஸ்ட் பேங்க்) பாலஸ்தீனம் என்ற நாடு உள்ளது.
இந்த காஸாவும் வெஸ்ட் பேங்க் பகுதியும் கூட முழு அளவில் சுதந்திரமாக இல்லை. இந்த இரு பகுதிகளிலும் பல பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளன. இங்கு தொடர்ந்து யூதர்கள் குடியேற்றம் நடந்து வருகிறது. வெஸ்ட் பேங்க் பகுதிக்கு உள்ளேயே ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்குச் செல்ல இஸ்ரேலிய செக் போஸ்ட்களைத் தாண்டியாக வேண்டும்.
பெரும் துயரத்தில் வாழ்க்கை...
அதாவது காலையில் ஒருவர் வேலைக்குச் செல்ல இந்த செக்போஸ்டில் வரிசையில் நின்று அனுமதி வாங்கிக் கொண்டு போக வேண்டும், மாலையில் அனுமதி வாங்கிவிட்டே திரும்பி வர வேண்டும். எல்லா நாளும் அனுமதி கிடைக்கும் என்று சொல்ல முடியாது. இதனால் இந்தப் பகுதி பாலஸ்தீனியர்களுக்கு எல்லா நாளும் வீட்டில் அடுப்பு எரிவதும் சாத்தியமில்லை.
ஹமாஸ் கட்டுப்பாட்டில் காஸா...
இப்போது பாலஸ்தீன அதிபராக மஹ்மூத் அப்பாஸ் உள்ளார். இவர் தான் காஸா மற்றும் வெஸ்ட் பேங்க் பகுதிகளுக்கான அதிபர். இவர் யாசர் அராபத் உருவாக்கிய பாலஸ்தீன விடுதலை இயக்கமான பிஎல்ஓ- பதா (Palestine Liberation Organization- Fatah) இயக்கத்தைச் சேர்ந்தவர். ஆனால், இதில் காஸா பகுதி மஹ்மூத் அப்பாஸின் நிர்வாகத்தின் கீழ் இருந்தாலும் கட்டுப்பாட்டில் இல்லை. இந்தப் பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது ஹமாஸ் அமைப்பு. இதன் தலைவர் அஸிஸ் துவைக் தான் இந்தப் பகுதியின் அதிபராகக் கருதப்படுகிறார். இவர் தான் பாலஸ்தீன நாடாளுமன்ற சபாநாயகராகவும் உள்ளார்.
ஜனநாயகம் மலர போராடுபவர்...
அமெரிக்காவில் பிஎச்டி பெற்ற அஸிஸ் தான் பிஎல்ஓ- ஹமாஸ் இடையே நடந்த அதிகாரப் போட்டியை முடிவுக்குக் கொண்டு வந்து பாலஸ்தீனத்தின் இரு பகுதிகளையும் இரு தரப்பும் பிரித்துக் கொண்டு ஆட்சி செய்ய வழி வகுத்தவர்களில் மிக முக்கியமானவர். ஆனால், இவர் அரபு நாடுகளில் சுதந்திரத்தை மலரச் செய்ய போராடி வரும் எகிப்தின் முஸ்லிம் பிரதர்ஹூட் அமைப்புக்கு மிக நெருக்கமானவர்... இங்கு தான் பிரச்சனையே...
ஆழ்ந்த அமைதியில் செளதி அரேபியா- எகிப்து
இதுவரை பாலஸ்தீனர்களுக்கு இஸ்ரேலால் பிரச்சனை எழுந்தபோதெல்லாம் நேரடியாகவோ மறைமுகமாகவோ உதவிக்கு வந்த செளதி அரேபியாவும் எகிப்தும் இப்போது ஆழ்ந்த அமைதியில் ஆழ்ந்துள்ளன. பாதிக்கப்பட்ட பாலஸ்தீனர்களுக்கு நிதி உதவியை மட்டும் அறிவித்துவிட்டு அமைதியாகிவிட்டது செளதி அரேபியா.
எகிப்து ஒருபடி மேலே போய், காஸா எல்லையையே மூடிவிட்டது... இதனால் இஸ்ரேலின் தாக்குதலுக்குத் தப்பி பாலஸ்தீனர்கள் எகிப்துக்குள் கூட நுழைய முடியாத நிலை. மேலும் இஸ்ரேலிய உளவுப் பிரிவினரும் செளதி- எகிப்து உளவுப் பிரிவினரும் தினந்தோறும் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதாகவும் தகவல்கள் வருகின்றன.
ஏன் இப்படி?.
இஸ்ரேலுக்கு ஏன் செளதியும் எகிப்தும் உதவ வேண்டும்?
(இஸ்ரேல்-செளதி உளவுப் பிரிவுகள் கூட்டணியும், இஸ்ரேல்-எகிப்து 'ஜாயிண்ட் ஆபரேசனும்'!!)