கோச்சடையான் படத்தில் ரஜினியுடன் ஐஸ்வர்யா ராய் நடிப்பதாக வந்த செய்திகள் உண்மையில்லை என்று அப்படத்தின் இயக்குநர் சௌந்தர்யா ரஜினி தெரிவித்துள்ளார்.
கே எஸ் ரவிக்குமார் மேற்பார்வையில் சௌந்தர்யா இயக்கும் கோச்சடையானில் ஐஸ்வர்யா ராய் சிறப்பு வேடத்தில் நடிப்பதாக கடந்த சில தினங்களாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
ஆனால் இதுகுறித்து சௌந்தர்யா விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "ஐஸ்வர்யா ராய் கௌரவ வேடத்தில் நடிக்கிறார் என்று வெளியான தகவல் வதந்திதான். கதாநாயகி யார் என்பது விரைவில் அறிவிக்கப்படும். இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்கிறார்," என்றார்.
ஜனவரி 15-ம் தேதி கோச்சடையான் படப்பிடிப்பு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வாரம் படத்தின் நடிகர் நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரம் வெளியாகிவிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.











