நான் எப்பவுமே மாஸ் ஹீரோ. மக்களுக்காகவே நடிக்கிறேன். மக்கள் விரும்பும் வரை நடிப்பேன் என்று அதிரடியாக பேசியுள்ளார் பவர் ஸ்டார் என்று தனக்குத் தானே அழைக்க ஆரம்பித்து இப்போது நிஜமாகவே மக்கள் மத்தியில் பிரபலமாகி விட்ட டாக்டர் சீனிவாசன்.
ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொன்னால் உண்மையாகி விடும் என்பார்கள். ஜெர்மனியின் கோயபல்ஸ் கூட அந்த வேலையைத்தான் சமர்த்தாக செய்து வந்தார். அது டாக்டர் சீனிவாசன் வாழ்க்கையில் நிஜமாகவே உண்மையாகி விட்டது.
தன்னை பவர் ஸ்டார் என்று அவர் முதலில் அவரே அழைத்து விளம்பரப்படுத்தியபோது அத்தனை பேரும் விழுந்து விழுந்து சிரித்தனர், கூடிக் கூடி கேலி பேசினர், நக்கலடித்தனர். ஆனால் நடந்தது என்ன... டாக்டர் சீனிவாசன் என்று சொன்னால் யாருக்குமே அடையாளம் தெரியாது. ஆனால் பவர் ஸ்டார் என்றால் பச்சைப் பிள்ளை கூட பளிச்சென சிரித்துச் சொல்லும் அளவுக்கு 'ஒலகப்' புகழ் பெற்று விட்டார் சீனி.
கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் வெற்றி சீனிவாசனுக்கு மிகப் பெரிய பிரேக் என்று சந்தேகமே இல்லாமல் கூறலாம். கிட்டத்தட்ட சந்தானம் ரேஞ்சுக்கு சீனியும் உயர்ந்து விட்டார்.


































