
சின்னத் திரை நடிகர் சங்கத் தலைவராக இருந்து வந்த நடிகர் எஸ்.என்.வசந்த் மாரடைப்பால் மரணமடைந்தார்.
மெல்லப் பேசுங்கள் என்ற படத்தின் மூலம் நடிகரானவர் வசந்த். இதே படத்தின் மூலம்தான் பானுப்பிரியாவும் நடிகையாக அறிமுகமானார்.
பெரிய திரையில் சில படங்களில் நடித்துள்ள வசந்த் பின்னர் சின்னத் திரையில் நடிக்கத் தொடங்கினார். நிறைய சீரியல்களில் நடித்துள்ள வசந்த், சின்னத்திரை நடிகர் சங்கத் தலைவராகவும் இருந்து வந்தார்.
சமீபத்தில் வசந்த்துக்கு இருதய நோய் ஏற்பட்டது. இதையடுத்து அறுவைச் சிகிச்சை மூலம் பேஸ் மேக்கர் கருவி பொருத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை விஜயா இருதய மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
52 வயதாகும் வசந்துக்கு மனைவி, ஒரு மகள் உள்ளனர். வசந்த் உடலுக்கு திரையுலகினர், சின்னத் திரை நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.





















