டெல்லி: வனயுத்தம் படத்தில் ஆட்சேபணைக்குரிய காட்சிகளை நீக்கக் கோரி சந்தனக் கடத்தல் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்தப் படத்தை இன்று வெளியிடப் போவதாக படத்தின் இயக்குநர் ரமேஷ் அறிவித்திருந்தார். ஆனால் நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரை காத்திருக்குமாறு நீதிபதிகள் கூறிவிட்டனர். எனவே இன்று படம் வெளியாகவில்லை.
இந்தப் படத்தில் 32 காட்சிகளை நீக்குமாறு முத்துலட்சுமி கூறியிருந்தார். ஆனால் அவற்றில் 2 காட்சிகளை மட்டுமே இயக்குநர் நீக்கியதாகவும், மற்ற காட்சிகளை அனுமதித்தால் தனது மகள்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்றும் முத்துலட்சுமி கோரியிருந்தார்.
ஆனால் ஏற்கெனவே படம் வெளியாவது குறித்து அறிவித்துவிட்டதால், படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று இயக்குநர் ரமேஷ் தரப்பில் கேட்டுக் கொண்டனர்.
ஆனால், நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை படத்தை வெளியிட வேண்டாம் என்று நீதிபதிகள் கூறிவிட்டனர். முத்துலட்சுமியுடன் பேசி சுமுக உடன்பாட்டுக்கு வருமாறு நீதிபதிகள் ரமேஷ் தரப்புக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
இதனால் இந்தப் படம் இன்று வெளியாகவில்லை. இன்று வழக்கு விசாரணை மீண்டும் நடக்கவிருக்கிறது.











