உன்னைப் போல் ஒருவன்-நாளை ரிலீஸ்: நீதிமன்றம் அனுமதி

வியாழக்கிழமை, செப்டம்பர் 17, 2009, 13:55 [IST]
கமல்ஹாஸனின் பொன்விழாப் படமான உன்னைப்போல் ஒருவன் படத்தை வெளியிட எந்தத் தடையும் இல்லை என ஐகோர்ட் அனுமதியளித்துள்ளது. ஆனால் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் கமல் தரப்பில் கோர்ட்டில் ரூ.4 கோடியை டெபாசிட் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

கமல்ஹாஸன் நடிப்பில் - தயாரிப்பில் உருவாகியுள்ள படம் உன்னைப்போல் ஒருவன். இந்தப் படத்தின் வெளியீட்டு வேலைகளில் கமல்ஹாஸன் தீவிரமாக இருந்தபோது, பிரமிட் சாய்மிரா நிறுவனம் சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தது.

அதில் மர்மயோகி படத்தை இயக்கி நடிக்க கமலுக்கு தாங்கள் வழங்கிய முன்பணம் ரூ.7 கோடியே 82 லட்சத்து 47 ஆயிரத்தைத் தராமல் படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என கோரியிருந்தது. மேலும் தாங்கள் வழங்கிய பணத்தில்தான் உன்னைப் போல் ஒருவனை கமல் எடுத்தார் என்றும் குற்றம்சாட்டினர்.

பதில் மனு தாக்கல்...

இந்த வழக்கில் நேற்று தனது பதில் மனுவை தாக்கல் செய்தார் கமல்ஹாஸன். அவரது அண்ணன் சந்திரஹாஸன் இதனை தாக்கல் செய்தார்.

அதில் மர்மயோகி படத்துக்காக தான் குறிப்பிட்ட தொகையை செலவு செய்திருப்பதாகவும், இந்த தயாரிப்பு தள்ளிப்போனதால், தனக்கு 40 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக கமலஹாசன் தெரிவித்திருந்தார்.

மேலும் அதில், "பிரமிட் சாய்மீரா படநிறுவன இயக்குனர் பொய் வழக்கை தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. 'மர்ம யோகி' படத்தை கமல்ஹாசன் இயக்குவதற்கு ரூ.1 கோடியும், அவர் நடிப்பதற்கு ரூ.15 கோடியும் தர சாய்மீரா நிறுவனம் சம்மதம் தெரிவித்தது. இதற்கான ஒப்பந்தமும் தயாரானது.

ராஜ்கமல் பிலிம் நிறுவனத்துக்கு ரூ.5 கோடியே 40 லட்சம் வழங்கப்பட்டது. இந்த படத்துக்காக சில காட்சிகளில் இயக்கி கமல்ஹாசன் நடித்துள்ளார். மேலும் கமல்ஹாசன் ஒரு பாடலை எழுதி பாடியுள்ளார். இதற்கு ஏர்.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். இதற்கு ரூ.50 லட்சம் முன்பணம் வழங்கப்பட்டது.

'மர்ம யோகி' இந்தி படத்துக்காக இந்தி நடிகர் அமிதாப்பச்சன், நடிகை பிரியங்கா சோப்ரா ஆகியோரை நடிக்க ஏற்பாடு செய்வதாக எங்கள் தரப்பில் உறுதி அளிக்கவில்லை. 'மர்ம யோகி' தமிழ் படத்துக்காக பல நடிகர்கள் நடிப்பதற்காக தேதி பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. நடிகைகள் திரிஷா, ஸ்ரேயா மற்றும் ஏ.ஆர்.ரகுமான், வெளிநாட்டு தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோருக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இவர்களுக்கு கணிசமான பணம் வழங்கப்பட்டது. படம் தயாரிப்பதற்கு முன்பாகவே ரூ.1 கோடியே 60 லட்சம் செலவு செய்யப்பட்டது. பல மாதங்களாக இந்திய மற்றும் வெளிநாட்டு தொழில்நுட்ப கலைஞர்கள் தங்குவதற்கு இடமும், சாப்பாடு வசதியும் செய்யப்பட்டது. இந்த படத்தை தாய்லாந்தில் எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர் அந்த திட்டம் கைவிடப்பட்டது. ஆனால் இதற்காக ரூ.88 லட்சம் வரை செலவானது.

ரூ.40 கோடி இழப்பு

ஒரு ஆண்டாக எந்த படத்திலும் கமல்ஹாசன் நடிக்காததால் ரூ.40 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. 'உன்னைப்போல் ஒருவன்' படத்தை வெளியிடுவதற்கு முன்பாக பணத்தை திருப்பி தருகிறோம் என்று எந்த உத்தரவாதமும் வழங்கவில்லை. மர்ம யோகி படத்துக்காக நாங்கள் கணிசமான செலவு செய்துள்ளோம். பணத்தட்டுப்பாடு காரணமாகவே இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. சாய்மீரா நிறுவனம் வழங்கிய பணத்தை நாங்கள் தயாரித்த 'உன்னைப்போல் ஒருவன்' படத்துக்கு பயன்படுத்தினோம் என்பது தவறு

'உன்னைப்போல் ஒருவன்' படத்தை வெளியிட தடை விதித்தால் எங்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்படும். இந்த படத்துக்காக ரூ.40 கோடி செலவு செய்துள்ளோம். படத்தை வெளியிடுவதில் காலதாமதம் செய்தால் படத்துக்கு முதலீடு செய்தவர்கள் பாதிக்கப்படுவார்கள். எங்களுக்கு இடையூறு செய்து, நிர்ப்பந்தப்படுத்தி பணம் பெறுவதுதான் மனுதாரரின் நோக்கம். ஆகவே இந்த மனுவை தள்ளுபடி செய்யவேண்டும், என்றும் கோரியிருந்தார்.

இருதரப்பு மனுவையும் விசாரித்த நீதிபதி ராஜசூர்யா, வருகிற செப்டம்பருக்குள் கமல்ஹாஸன் தரப்பிலிருந்து ரூ.4 கோடியை கோர்ட்டில் டெபாசிட் செய்ய வேண்டும் என்றும், படத்தை நாளை வெளியிட எந்த தடையுமில்லை என்றும் தீர்ப்பு வழங்கினார்.

எனவே நாளை திட்டமிட்டபடி கமல்ஹாஸனின் உன்னைப்போல் ஒருவன் உலகம் முழுவதும் வெளியாகிறது.
IPL, Wankhede Stadium, Mumbai
Kolkata Knight Riders won by 32 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
Match starts at 03:30 pm IST  
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Match starts at 04:00 pm IST