
ரஜினியின் அனிமேஷன் படமான கோச்சடையான் முடிந்ததும், சஞ்சய் தத்தை வைத்து ஒரு இந்திப் படம் இயக்குவதாகவும், அதன் பிறகே ராணா இயக்குவேன் என்றும் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த்-கே.எஸ்.ரவிகுமார் ஆகிய இருவரும் ஏற்கனவே 'முத்து', 'படையப்பா' ஆகிய 2 படங்களில் இணைந்து பணிபுரிந்தார்கள். அதையடுத்து இருவரும் 'ராணா' படத்தில் இணைவதாக இருந்தார்கள்.
'ராணா' படத்தில் நிறைய சண்டை காட்சிகளும், சாகசங்கள் நிறைந்த குதிரை சவாரி காட்சிகளும் இருப்பதால், அவருடைய உடல் நலனை கருதி, அந்த படம் தள்ளிப் போடப்பட்டுள்ளது.
'கோச்சடையான்'
அதற்கு முன்பாக, 'கோச்சடையான்' என்ற புதிய படத்தை உருவாக்க ரஜினிகாந்த், கே.எஸ்.ரவிகுமார் ஆகிய இருவரும் திட்டமிட்டிருக்கிறார்கள். இது, ஒரு மாவீரனை பற்றிய கதை.
படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்குநர் மேற்பார்வையை கே.எஸ்.ரவிகுமார் கவனிக்கிறார். ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா கோச்சடையானை இயக்குகிறார்.
'கோச்சடையான்' படம் பற்றியும், முதன்முதலாக ஒரு இந்தி படம் இயக்குவது பற்றியும் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் அளித்துள்ள பேட்டியில், "கோச்சடையான் படத்துக்கு திரைக்கதை அமைக்கும் பணி முடிவடைந்து விட்டது. கதை, ரஜினிகாந்துக்கு மிகவும் பிடித்து இருக்கிறது. இந்த கதைக்கும், ஒரு வார பத்திரிகையில் வந்து கொண்டிருக்கும் 'கோச்சடையான்' என்ற கதைக்கும் எந்த தொடர்பும் இல்லை.
ஜனவரியில் படப்பிடிப்பு
ஜனவரி 15-ந் தேதிக்கு மேல் 'கோச்சடையான்' படப்பிடிப்பை தொடங்க இருக்கிறோம். மார்ச் மாதத்துக்குள் படப்பிடிப்பை முடித்து விடுவோம்.
அதன்பிறகு, நான் ஒரு இந்தி படத்தை இயக்குகிறேன். அந்த படத்தில், சஞ்சய்தத் கதாநாயகனாக நடிக்கிறார். இந்தி படம் முடிவடைந்த பின், ரஜினி நடிக்க 'ராணா' படத்தை இயக்குவேன்,'' என்று கூறியுள்ளார்.
இதன் மூலம் கோச்சடையான் முடிந்தவுடன் ராணா தொடங்க வாய்ப்பில்லை என்பது உறுதியாகியுள்ளது.





















