
புதிதாய் ஒரு செய்தி தொலைக்காட்சி தொடங்கிய உடனே முதல் இடத்தை பிடிப்பது என்பது சாதாரண விஷயமல்ல. அது வழங்கும் நிகழ்ச்சிகளின் தரம். மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதம் என அனைத்திலும் புதுமையை புகுத்தினால் மட்டுமே அந்த செய்தி மக்களிடம் எளிதில் சென்றடையும்.
அந்த வகையில் புதிய தலைமுறை தொலைக்காட்சி தான் வழங்கும் செய்திகளில் மட்டுமல்லாது நிகழ்ச்சிகளிலும் புதுமையை புகுத்தி மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளது.
சினிமாத்தனம் எதுவும் இல்லை. மக்களைக் கவர கமர்சியல் சீரியல்கள் எதுவும் கிடையாது இருந்தாலும் புதிது புதிதாய் செய்திகளை கூறும் விதம் தொலைக்காட்சி ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.
24 மணி நேரம் செய்தி தவிர புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஆயுதம் செய்வோம், ரௌத்திரம் பழகு, யப்பீஸ்க்கு மட்டுமல்ல, புதுப்புது அர்த்தங்கள், சினிமா 360 டிகிரி, கேம்பஸ் காம்பஸ், கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு போன்ற நிகழ்ச்சிகள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது என்றே கூறுகின்றனர் தொலைக்காட்சி விமர்ச்சகர்கள்.
சாதாரணமாக அரைத்தமாவையே அரைத்துக்கொண்டிருக்காமல் புதிதாய் எதையாவது முயற்சி செய்தால் மட்டுமே மக்களிடம் வரவேற்பு பெற முடியும் என்பதை உணர்ந்தே களம் இறங்கியுள்ளனர் புதிய தலைமுறை தொலைக்காட்சியினர் என்றும் விமர்ச்சகர்கள் கூறுகின்றனர்.


















