பொறுமையைச் சோதிக்காதீர்கள் .. மிரட்டுகிறது கன்னட அமைப்பு
பெங்களூர்:
நடிகர் ராஜ்குமாரையும், பிற மூவரையும் மீட்பதற்கு கர்நாடகத்தில் உள்ள 10 லட்சம் கன்னட மக்கள் தயாராக இருக்கிறார்கள். கன்னடர்கள்பொறுமை இழக்கும் முன் ராஜ்குமார் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று கர்நாடக எல்லைப் பகுதி மேம்பாட்டு வாரியத் தலைவரும், கன்னட சளுவளிஎன்ற இயக்கத்தின் தலைவருமான வாட்டாள் நாகராஜ் கூறியுள்ளார்.
நடிகர் ராஜ்குமார் விடுதலை தாமதமாவது தொடர்பாக அகில கர்நாடக கன்னட சளுவளி அமைப்பின சார்பில் பல கன்னட அமைப்புகளின் தலைவர்கள்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்குப் பின் வாட்டாள் நாகராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், நடிகர் ராஜ்குமாரும், அவரது உறவினர்கள் மூன்று பேரும்கடத்தப்பட்டது கன்னட மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் கடத்தப்பட்ட நாள் முதல் இன்று வரை நடக்கும் ஒவ்வொருநிகழ்ச்சியையும் கன்னட மக்கள் மிக உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள்.
ராஜ்குமாரை விடுவிப்பது மிகவும் சிக்கலான விஷயமாகும். கன்னடர்கள் எதைப் பேசினாலும் அது மேலும் சிக்கலை உருவாக்கி விடும். கன்னடர்கள்யாரும் கைகட்டி அமர்ந்திருக்கவில்லை. கன்னடர்கள் பற்றி வீரப்பன் தவறாக எடை போட்டு விடக் கூடாது.
கடந்த 9 ஆண்டுகளாக ராஜ்குமார் கடத்தப்படுவது குறித்து வதந்தி இருந்தது. போலீஸ் பாதுகாப்பு தேவையில்லை என்று ராஜ்குமார் கூறியிருந்தும் அவருக்குஉரிய பாதுகாப்பு தர வேண்டியது இரு மாநில அரசுகளின் கடமையாகும். பாதுகாப்பு தராதது குறித்து மாநில அரசு முழுமையாக விசாரணை நடத்த வேண்டும்.
திங்கள்கிழமை பெங்களூரில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கன்னட அமைப்புக்களை அழைக்காதது கண்டிக்கத்தக்கது என்றார் வாட்டாள் நாகராஜ்.
இக்கூட்டத்தில் பல்வேறு கன்னட அமைப்புகளைச் சேர்ந்த நாராயணகுமார், பிரபாகர் ரெட்டி, சந்தரண்ண கெளடா, முத்தே கெளடா, பிரசன்ன குமார்ஆகியோரும் கலந்து கொண்டனர்.