உக்ரைனிலுள்ள இந்திய மாணவர் விடுதி மீது தாக்குதல்
மாஸ்கோ:
உக்ரைன் நாட்டிலுள்ள லகான்ஸ்க் நகரில் இந்தியர்கள் உள்ளிட்ட தெற்காசிய மாணவர்கள் தங்கியிருந்த விடுதியில் 40 பேர் கொண்ட கும்பல் புதன்கிழமைதாக்குதல் நடத்தியது.
இந்த விடுதியில் இந்தியா, இலங்கை, வங்கதேசம், நேபால் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் தங்கியிருந்தனர். புதன்கிழமை 40 பேர்கொண்ட கும்பல் இங்கு வந்தது. இரும்புக் கம்பிகள், தடிகள் ஆகியவற்றுடன் வந்த அவர்கள் விடுதிக்குள் புகுந்து கடுமையாகத் தாக்குதல்நடத்தினார்கள். ஜன்னல் கதவுகள் உடைந்து நொறுங்கின. சுமார் ஒரு மணிநேரம் நடத்திய தாக்குதலுக்குப் பின் அனைவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
தலைநகர் கியூ நகரிலுள்ள இந்தியத் தூதரக அதிகாரி வித்யா பூஷன் சோனி இதுகுறித்துக் கூறுகையில், இந்தத் தாக்குதல் சம்பவத்தில் இந்திய மாணவர்கள்யாரும் காயமடையவில்லை என்றார். தாக்குதல் நடந்த இடத்தையும் அவர் பார்வையிட்டார்.
தாக்குதல் குறித்து இந்திய மாணவர் ஒருவர் கூறுகையில், கும்பல் வந்ததும் நாங்கள் கதவுகளை அடைத்து விட்டு விடுதிக்குள் இருந்தோம். கூச்சல்போட்டால் உங்கள் அனைவரையும் கொலை செய்து விடுவோம் என்று அவர்கள் மிரட்டினார்கள் என்றார்.
இந்த சம்பவம் தொடர்பாக, 21 வயதான இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கும்பலின் தலைவராக இருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.
கடந்த 2 மாதங்களாக உக்ரைனில் ஆசியர்கள் மீதும், அவர்கள் தங்கியுள்ள விடுதிகளிலும் தாக்குதல்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்துஉக்ரைன் அரசு மீது சர்வதேச மனித உரிமைக் கழகம் குற்றம்சாட்டியுள்ளது. மக்களுக்கு உரிய பாதுகாப்புத் தர உக்ரைன் அரசு தவறி விட்டதுஎன்றும் அது கூறியுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.