சாதி, மதம், இனம், மொழிகளைக் கடந்தது பா.ஜ.க
பொள்ளாச்சி:
சாதி, மத, இன, மொழி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட கட்சி தான் பாரதிய ஜனதாக் கட்சி என அகில இந்திய பாரதிய ஜனதாக் கட்சித் தலைவர் பங்காரு லட்சுமணன் கூறினார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் புதன்கிழமைபாரதிய ஜனதாக் கட்சியின் மாநில பொதுக் குழுக் கூட்டம் மற்றும் செயற்குழுக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தை தொடர்ந்து மாலையில் பேரணி மற்றும் பொதுக் கூட்டம் நடந்தது.
இதில், தமிழக பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவர் கிருபாநிதி, பொதுச் செயலர்கள் இல. கணேசன், எச். ராஜா, வர்த்தக அணித் தலைவர் சேகர் உட்பட செயற்குழு மற்றும் பொதுக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்கு பங்காரு லட்சுமணன் தலைமை வகித்தார். பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், கோவையில் எனக்கு கறுப்புக் கொடி காட்டியது தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது.
காருண்யா தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவர்கள் பொட்டு வைக்கக் கூடாது, திலகமிடக் கூடாது என்று விதிமுறை இருப்பதாகக் கூறப்படுவது பற்றியும் தெரியாது.
திருச்சி எம்.பி தொகுதியில் போட்டியிட உள்ள பாரதீய ஜனதா வேட்பாளர் குறித்து கமிட்டி கூடி முடிவு செய்யும். பாரதிய ஜனதாக் கட்சி சாதி, மத, இன, மொழி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது என்றார்.