நாளை கெடு முடிகிறது.. வழக்கிலும் நாளை தீர்ப்பு: ஸ்டாலின் பதவி தப்புமா?
சென்னை:
சென்னை மேயர் ஸ்டாலின் தனது பதவியை ராஜினாமா செய்ய நாளை தான் கடைசி நாளாகும். அதே நேரத்தில்அவரது பதவிப் பறிப்பை எதிர்த்துத் தொடரப்பட்டுள்ள வழக்கிலும் நாளை தான் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
இதனால் அவரது பதவி தப்புமா இல்லையா என்பது நாளை தெரிந்துவிடும்.
ஒருவருக்கு ஒரு பதவி என ஸ்டாலினைக் குறி வைத்து தமிழக அரசு சட்டம் கொண்டு வந்தது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் 2 பதவிகளில் ஒருவரே இருக்க இந்தச் சட்டம் தடை விதிக்கிறது.
சட்டம் அமலுக்கு வந்த 14 நாட்களுக்குள் ஸ்டாலின் ஏதாவது ஒரு பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.அல்லது அரசே ஏதாவது ஒரு பதவியைப் பறிக்கும். நாளையுடன் இந்த 14 நாள் கெடு முடிகிறது.
எந்தப் பதவியையும் ராஜினாமா செய்யப் போவதில்லை என்று ஸ்டாலினும் திமுக தலைவர் கருணாநிதியும்திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டனர். இதனால் எம்.எல்.ஏவாகவும் இருக்கும் ஸ்டாலினின் மேயர் பதவியைப்பறிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
நாளை தீர்ப்பு:
இந் நிலையில் ஒருவருக்கு ஒரு பதவி சட்டத்தை எதிர்த்து வழக்கறிஞர் விஜயன் தாக்கல் செய்துள்ள வழக்கு இன்றுசென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி முருகேசன் அடங்கிய டிவிசன் பெஞ்ச் இதனை விசாரித்தது.
அப்போது இது தொடர்பாக ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
விஜயனின் மனுவுக்கு எதிராக நாளை பதில் மனு தாக்கல் செய்யுமாறு அரசு வழக்கறிஞருக்கும் நீதிபதிகள்உத்தரவிட்டனர். இந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என அவர்கள் அறிவித்தனர்.
விஜயன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
நான் ஸ்டாலினுக்காக இந்த வழக்கைத் தாக்கல் செய்யவில்லை. சென்னை மாநகராட்சியில் வாக்களித்தவன் என்றமுறையில் இந்த மனுவைப் போட்டுள்ளேன்.
ஒருவருக்கு ஒரு பதவி என்ற திட்டம் சரியானது தான். ஆனால், அதை முன் தேதியிட்டு அமலாக்க வேண்டியஅவசியம் இல்லை. இதன் மூலம் ஸ்டாலினின் பதவியைப் பறிக்க ஜெயலலிதா திட்டமிடுவது தெரிகிறது.
எனவே, இந்தச் சட்டத்துக்கு நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் தீர்ப்பு அரசுக்கு எதிராக இருந்தால் ஸ்டாலினின் பதவி தப்பிவிடும்.
மேயர் பதவிக்கு இடைத் தேர்தல்:
இந் நிலையில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற புதிய சட்டத்தின் கீழ் சென்னை மேயர் ஸ்டாலினுடைய பதவி காலியாகி விட்டது என்று சென்னை மாநகராட்சிஆணையர் தகவல் அனுப்பினால் 6 மாதத்தில் மேயர் பதவிக்கான இடைத் தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் அதிகாரி பழனிச்சாமி கூறினார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஒருவருக்கு ஒருபதவி என்ற சட்டத்தின் கீழ் ஸ்டாலின் உள்ளிட்ட 3 பேருடைய பதவிகள் பறிபோகும் வாய்ப்புகள்உள்ளன. இருப்பினும், சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு இடைத் தேர்தல் நடத்துவது தொடர்பாக தேர்தல் அதிகாரியான சென்னை மாநகராட்சிஆணையர் எங்களுக்குத் தகவல் அனுப்ப வேண்டும்.
அதன் பிறகு 6 மாதத்திற்குள் இடைத் தேர்தல் நடத்துவது தொடர்பாக தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்கும் என்றார்.
நீதிமன்றத் தீர்புக்குப் பின்னர் தான் இந்த விவகாரத்தில் மாநகராட்சி ஆணையர் தேர்தல் கமிஷனுக்குக் கடிதம் எழுதுவார்.