நெய்வேலி மின் நிலையத்தில் பயங்கர தீ: மின் உற்பத்தி பாதிப்பு
நெய்வேலி:
நெய்வேலி அனல் மின் நிலையத்தில் நிலக்கரியை எடுத்துச் செல்லும் கன்வேயர் பெல்ட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் இந்தபெல்ட் முழுவதுமாக எரிந்து நாசமாகிவிட்டதால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
அனல் மின் நிலையத்தில் இரணடாவது யூனிட்டுக்கு நிலக்கரி கொண்டு செல்லும் இந்த பெல்டில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டது. இந்தகன்வேயர் பெல்ட் சுமார் ரூ. 1 கோடி மதிப்புடையதாகும். திடீரென இதில் ஏற்பட்ட தீ அதில் இருந்த நிலக்கரிக்கும் பரவியது.
இதனால் பல நூறு டன் நிலக்கரியுடன் சேர்ந்து அந்த கன்வேயர் பெல்ட் முழுவதுமாக எரிந்து நாசமானது. பல கி.மீ. நீளம் கொண்ட இந்தபெல்டை மாற்ற குறைந்தபட்சம் ஒரு வார காலம் ஆகும் என்று தெரிகிறது. இந்த பெல்ட் ஒரு நாளைக்கு 6,000 டன் நிலக்கரியை சுரங்கத்தில்இருந்து மின் நிலையத்தின் பாய்லர்களுக்குக் கொண்டு செல்லும் திறன் கொண்டது.
இதனால் ஒரு வார காலம் நெய்வேலி மின் நிலையத்தின் ஒரு பிரிவில் மின் உற்பத்தி முழுவதுமாக நிறுத்தப்பட வேண்டிய சூழ்நிலைஏற்பட்டது. இங்கு ஒரு நாளைக்கு 1,470 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், இன்று மூன்றாவது நாளாக அங்கு மின்உற்பத்தி நடக்கவில்லை.
இதனால், தமிழகம், கர்நாடகம், ஆந்திரம், பாண்டிச்சேரி, கேரளம் ஆகிய மாநிலங்களுக்கு மின் வினியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க டெல்லியில் இருந்து மத்திய சுரங்கத்துறை கூடுதல் செயலாளர் ரவி சர்மா தலைமையிலான அதிகாரிகள்குழு நெய்வேலி வந்துள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து 1 வாரத்தில் அறிக்கை சமர்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக மின்நிலையத்தின் இயக்குனர் ஜெயராமன் இன்று நிருபர்களிடம் தெரிவித்தார்.
சமீப காலமாக நெய்வேலி சுரங்கத்தில் விபத்துக்களும் அதனால் ஏற்படும் சேதங்களும் மிகவும் அதிகரித்துவிட்டன என்பதுகுறிப்பிடத்தக்கது. முதலில் இது சாதாரண தீ விபத்தாகக் கருதப்பட்டது. ஆனால், இன்று தான் முழு விவரங்களும் வெளியில் வந்துள்ளன.