ஜெயேந்திரர் மீது 4வதாக மோசடி வழக்கு!
சென்னை:
சங்கர மடத்தின் பணத்தை கையாடல் செய்ததாக ஜெயேந்திரர் மீது புதிதாக ஒரு மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த வழக்கில் கைதாகாமல் தப்ப முன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் ஜெயேந்திரர் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஏற்கனவே திருக்கோஷ்டியூர் மாதவன் தாக்கப்பட்ட வழக்கிலும் ஜெயேந்திரர் முன் ஜாமீன் கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மனுவின் மீதான விசாரணையே முடியாத நிலையில், மீண்டும் இன்னொரு வழக்கிலும் முன் ஜாமீன் கோரியுள்ளார்.
ஜெயேந்திரர் மீது சங்கரராமன் கொலை வழக்கு, ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கு, திருக்கோஷ்டியூர் மாதவன் தாக்கப்பட்ட வழக்கு ஆகியவை பதிவாகியுள்ளன. இப்போது வங்கிக் கணக்கு முறைகேடு தொடர்பாகவும் ஒரு வழக்கை காஞ்சி போலீசார் பதிவு செய்துள்ளனர்.
சங்கர மடத்தின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது பேசிய அரசு வழக்கறிஞர் துரைசாமி இந்த புதிய வழக்கு குறித்த விவரத்தை நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
துரைசாமி கூறியதாவது:
காஞ்சி மடம் சட்டப்படி பதிவு செய்யப்படவே இல்லை. இதன் கணக்குகள் அறக்கட்டளைகளின் பெயரில் இருந்தால் அந்தப் பணத்தை ஜெயேந்திரர் எடுக்கவே முடியாது. ஆனால், அவர் தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி அறக்கட்டளைகளின் வங்கிக் கணக்குகளின் இருந்து பல லட்சம் பணம் எடுத்துள்ளார்.
பின்னர் வங்கிக் கணக்கு குறித்த ஆவணங்களை சுந்தரேச அய்யர் திருத்தியுள்ளார். இந்த வங்கிக் கணக்கு மோசடி தொடர்பாக ஜெயேந்திரர் மீது நாலாவதாக ஒரு வழக்கையும் பதிவு செய்துள்ளோம் என்றார்.
இதையடுத்துப் பேசிய நீதிபதி, சிவசுப்பிரமணியம் ஜெயேந்திரர் மீது எத்தனை வழக்குகள் போடப்பட்டுள்ளன என்ற முழு விவரத்தையும் தாக்க் செய்யுமாறு அரசுக்கு உத்தரவிட்டார்.
இந் நிலையில் இந்த வங்கிக் கணக்கு மோசடி வழக்கில் கைதாகாமல் தப்ப, உயர் நீதிமன்றத்தில் ஜெயேந்திரர் இன்று முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
வங்கிக் கணக்குகள் தொடர்பான மடத்தின் ஆவணங்களை திருத்தியதாக என் மீது பொய்யான வழக்கு போடப்பட்டுள்ளது. என் பெயரைக் கெடுக்கவே இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சங்கரராமன், ஆடிட்டர் வழக்குகளில் எனக்கு ஜாமீன் தரப்பட்டுவிட்டதால், பழி வாங்கும் வகையில் இந்த புது வழக்கு போடப்பட்டுள்ளது.
எனவே இந்த வழக்கில் என்னைக் கைது செய்வதைத் தடுக்க முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த புதிய வழக்கில், ஜெயேந்திரர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 420 (ஏமாற்றுதல்), 436வது பிரிவு (மோசடி), 465 (மோசடிக்கு தண்டனை), 468 (ஏமாற்றுதலுக்காக மோசடி), 471 (போலி ஆவணம் தயாரித்தல்), 474 (போலி என்று தெரிந்தும் அந்த ஆவணங்களை வைத்திருத்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் சகட்டுமேனிக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வங்கிக் கணக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு
இதற்கிடையே சங்கர மடத்தின் 181 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று முடிவடைந்தது. இதையடுத்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி சுப்பிரமணியம் ஒத்தி வைத்தார்.