திமுகவுக்கு மறக்க முடியாத பாடம்: மக்களுக்கு ஜெ. கோரிக்கை
காஞ்சிபுரம்:
அதிமுக ஆட்சியில்தான் நெசவாளர்களுக்கு ஏராளமான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன என்று நெசவாளர்கள்நிறைந்த காஞ்சிபுரத்தில் முதல்வர் ஜெயலலிதா பிரசாரம் செய்தார்.
ஜெயலலிதா பேசி முடித்துச் சென்றதும் அதே பகுதியில் பிரச்சாரம் செய்த திமுகவினர், நெசவாளர்களுக்காக அதிமுக ஆட்சியில்கஞ்சித் தொட்டி திறக்கும் நிலை ஏற்பட்டதை சுட்டிக் காட்டி பிரச்சாரம் செய்தனர்.
நெசவாளர்கள் மற்றும் முதலியார் வகுப்பைச் சேர்ந்தவர்கள் அதிகம் வசிக்கும் இந்தப் பகுதியில் ஜெயலலிதா பேசியதாவது:
செய்யும் தொழிலில் நெய்யும் தொழிலுக்கு நிகரில்லை என்று புகழ்ந்து பேசப்படும் உன்னதத் தொழில் நெசவுத் தொழில். மானம்காக்க ஆடை தரும் தொழிலாளர்கள் வாழ்வு மலர கடந்த திமுக ஆட்சியில் ஒரு திட்டமும் கொண்டு வரப்படவில்லை. திமுகஆட்சியாளர்கள் செய்ததை உள்ளது உள்ளபடியே சொல்ல வேண்டுமானாலும் எல்லாம் குளறுபடிதான்.
2001ல் திமுக ஆட்சியை விட்டுச் செல்லும்போது 442 கோடி ரூபாய் அளவுக்கு கைத்தறி ஜவுளி சரக்கு இருப்பை வைத்து விட்டுச்சென்றனர். ஆனால் கடந்த 4 ஆண்டுகளில் உங்கள் அன்புச் சகோதரியின் ஆட்சியில், விற்பனை செய்யப்பட்ட துணிகளின் மதிப்புரூ. 2,406 கோடியாகும்.
குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காக நெசவாளர் குடும்பங்களை கேவலப்படுத்தவும், அவர்களின் தன்மானத்துக்கு இழுக்குஏற்படுத்தவும் திமுகவினர் செய்த முயற்சிகளை முறியடித்து நெசவாளர் இல்லங்களில் மகிழ்ச்சி தவழ்ந்திட எனது அரசு பல்வேறுநடவடிக்கைகளை மேற்கொண்டது.
25,000 நெசவாளர் குடும்பங்களுக்கு 3 மாதங்களுக்கு மாதம் 60 கிலோ அரிசியை எனது அரசு வழங்கியது. மலிவு விலைவேஷ்டி, சேலை விற்பனை திட்டத்தைத் தொடங்கி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் தேங்கி இருந்த வேஷ்டி, சேலைகளை கோஆப்டெக்ஸ் மூலம் கொள்முதல் செய்து விற்பனை செய்தது எனது ஆட்சியில்தான்.
நெசவாளர்கள் இயற்கையாக மரணம் அடைந்தால் ரூ. 50,000ம், விபத்தில் மரணமுற்றால் 80,000 ரூபாயும் அவர்களின்வாரிசுதாரர்களுக்கு வழங்கிடும் வகையில், புதிய காப்பீட்டுத் திட்டத்தை எனது அரசு செயல்படுத்தி வருகிறது.
2001ம் ஆண்டு அதிமுக அரசு மீண்டும் பொறுப்பேற்ற பிறகு, இதுவரை 3 லட்சத்து 68,000க்கும் மேற்பட்ட இலவச வீட்டுமனைப்பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
திமுக, காங்கிரஸ் உள்பட 7 கட்சிகளைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களை இங்கே வரவழைத்து என்னை தனிப்பட்ட முறையில்தாக்கிப் பேசி வருகிறார்கள். அவர்களுக்கு நீங்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும்.
மக்கள் நலனை விட வீட்டு நலனே பெரிது என்று எண்ணி செயல்படும் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட 7 கட்சிகளுக்கு மறக்கமுடியாதபடி நீங்கள் பாடம் புகட்ட வேண்டும், அதற்கான சந்தர்ப்பம்தான் இந்த இடைத் தேர்தல் என்றார் ஜெயலலிதா.
ஜெயலலிதாவின் பிரசாரம் நடந்த 8 இடங்களிலும் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது.
அவர் பிரச்சாரம் செய்துவிட்டுப் போனவுடன் அப் பகுதியை ரவுண்டு கட்டிய திமுகவினர், அதிமுக ஆட்சியில்நெசவாளர்களுக்காக கஞ்சித் தொட்டிகள் திறக்கப்பட்டதை டைமிங்காக நினைவூட்டிவிட்டுச் சென்றனர். அவர்கள்நினைவூட்டல் பிரச்சாரத்துக்கும் மக்களிடம் நல்ல ஆதரவு இருந்தது.